நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: நாராயணசாமியை தோற்கடிக்க அதிமுக புது வியூகம்...
நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாராயணசாமியை தோற்கடிக்க அதிமுக புது வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. தனது கட்சியின் தேர்தல் பணிக்குப் பொறுப்பாளர்களை கூடுதலாக்கியுள்ளது கட்சித்தலைமை.
சென்னை: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் நாராயணசாமியை தோற்கடிக்க அதிமுக புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக கட்சிகள் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துவிட்டன.
காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் முதல்வருமான நாராயணசாமிக்கு ஆதரவாக திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்றி வருகின்றன.
அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகர் தங்கள் கட்சியினருடன் சேர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார். அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், புதுச்சேரி முன்னாள் முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாஜகவும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதன்மூலம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் நேரடி போட்டி என்பது உறுதியாகிவிட்டது.
தேர்தல் பணிக்குழு
அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், சமீபத்தில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் புருசோத்தமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
புதிய பணிக்குழுவினர் நியமனம்
அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பட்டியல் நேற்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள இந்த திருத்தப்பட்ட பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்ற பொறுப்பாளர்களுடன் கூடுதலாக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் பி.கண்ணன், மாநில சட்டமன்றக்குழு கட்சித் தலைவர் அன்பழகன், காரைக்கால் மாவட்ட செயலாளர் ஓமலிங்கம், என்.கோகுலகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்கு கவனிப்பு
முதல்வர் நாராயணசாமி, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, முதல்வர் நாற்காலியில் அமரமுடியும், இல்லை எனில் அவர் 6 மாத முதல்வர்தான். எனவே தனது வெற்றிக்காக அவர் பல வழிகளில் வாக்காளர்களை கவனிக்க தயாராக இருக்கிறார். அதேபோல நாராயணசாமியை தோற்கடித்தே ஆகவேண்டும் என்று அனைத்து எதிர்கட்சியினரும் கங்கணம் கட்டிக்கொண்டு பணியாற்றி வருகின்றனர்.
வியூகத்தை உடைப்பாரா நாராயணசாமி
எதிர்கட்சிகளின் பலமான கவனிப்பு வாக்காளர்களை சென்றடைந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த கவனிப்பை விட அதிகமாக கவனித்து நாராயணசாமி நெல்லித்தோப்பு வாக்காளர்களை கவர்ந்தால் மட்டுமே எதிர்கட்சியினரின் வியூகத்தை உடைக்க முடியும். இடைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக நீடிக்க முடியும் என்பது உண்மை. நாராயணசாமி வியூகத்தை உடைப்பாரா? அல்லது முதல்வராக இருந்து போட்டியிட்டு தோல்வியை தழுவுவாரா? வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கிறது நெல்லித்தோப்பு.