ஆட்டம் காணும் அமைச்சர் தொகுதிகள்.. தலைநகரில் தடுமாறும் அதிமுக
சென்னை: சென்னையில் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளே ஆட்டம் கண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா நகர் தொகுதியில் அமைச்சர் கோகுல இந்திராவும், ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைச்சர் வளர்மதியும் போட்டியிடுகிறார்கள்.
இவ்விரு தொகுதிகளை தவிர, துறைமுகம் மற்றும் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் ஆகிய தொகுதிகள், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பை பறிக்க உள்ளதாக ஜெயலலிதாவுக்கு உளவுத்துறை தகவல் கூறியுள்ளதாம்.

திமுக கோட்டை
பல வருடங்களாக திமுக வசம் இருந்த அண்ணா நகர் தொகுதி 2011 தேர்தலில் அதிமுக கைக்கு சென்றது. வெற்றி பெற்ற கோகுல இந்திரா அமைச்சராக உள்ளார். 1977ல் இந்த தொகுதி உருவானது. கருணாநிதி, சோ.மா.ராமச்சந்திரன் தவிர, ஆற்காடு வீராசாமி மூன்றுமுறை வெற்றி பெற்ற தொகுதி இதுவாகும்.

ஸ்டாலின் ஆதரவு
இந்த முறை ஆற்காடு வீராசாமி தனது மகனுக்கு சீட் வாங்கி தர முயன்றும் ஸ்டாலினின் கை ஓங்கியிருந்ததால், அவரது ஆதரவாளரான தொழிலதிபர் எம்.கே.மோகன் திமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் திமுக சொல்லியடிக்க வாய்ப்புள்ளது. காரணம், நாயுடு மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு அதிகமாக உள்ளதாம்.

துறைமுகம்
சென்னை துறைமுகம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் கு.சீனிவாசன் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவருக்கு எதிராக திமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர், சில ஆண்டுகள் முன்புவரை அதிமுக மாவட்ட செயலராக இருந்த பி.கே.சேகர் பாபு.

சீடர்
இப்போது திமுக மா.செவாக உள்ள சேகர் பாவுவுக்கு நெருக்கமானவர் கு.சீனிவாசன். எனவே சீனிவாசனின் பெயரை அறிவித்ததுமே தொகுதி திமுகவுக்குதான் என்று அதிமுகவின் ஏரியா பிரமுகர்கள் முடிவு செய்து விட்டார்களாம்.

கொளத்தூர்
இதேபோல கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து, போட்டியிட, வில்லிவாக்கம் அதிமுக எம்.எல்.ஏ.வான ஜே.சி.டி. பிரபாகரன் களமிறக்கப்பட்டுள்ளார். பிரபாகரன் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. ஆனால், படை பலம், பணபலம் இன்றி ஸ்டாலினை தோற்கடிக்க முடியாது என்பதால் அந்த தொகுதியும் கேள்விக்குறியாக நிற்கிறது.

வளர்மதிக்கு நெருக்கடி
ஆயிரம் விளக்குத் தொகுதியில் வளர்மதியின் முன்னாள் சீடர், கு.க.செல்வம் திமுக சார்பில் வளர்மதிக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளார். வளர்மதிக்கு நிகராக, ஆள் பலம், பண பலம் கொண்டிருக்கிறார். அதேநேரம், வளர்மதிக்கு
அத்தொகுதியின் மொத்தமுள்ள 12 வட்டங்களில், ஆறு வட்டங்களில் சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. வளர்மதிக்கு எதிராக, வி.பி.கலைராஜன் அணி செயல்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications