ஜெயலலிதாவின் எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரைக்கூட தாண்டமுடியாது… மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி: அதிமுக என்ற எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரையே தாண்ட முடியாது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் உடுமலையில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது
மின் உற்பத்தி என்று எடுத்துக்கொண்டால் எனது அரசின் பகீரத முயற்சியின் காரணமாக தற்போது கிட்டதட்ட 2500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்ற ஒரு அண்டப்புளுகை, ஆகாசப் புளுகை ஜெயலலிதா மதுரையில் அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
2500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்களே, நான் கேட்கிறேன் இதுவரையில் ஒரு மெகாவாட் மின்சாரத்தை இந்த 3 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா ஆட்சி உற்பத்தி செய்திருக்கிறதா. கிடையாது.
திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில், 2006ல் கலைஞர் 5வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றபோது, மின் உற்பத்திக்கான பல திட்டங்களை தீட்டினார். 20,624 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7,798 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டம் தந்தவர் கலைஞர். அதை ஜெயலலிதா நிறைவேற்றியிருந்தால், தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறியிருக்கும். ஆனால் அதனை நிறைவேற்ற ஜெயலலிதா முன்வரவில்லை.
மின்சாரம் இல்லாத மாநிலம்
2011 தேர்தலில் ஜெயலலிதா என்ன சொன்னார். நான் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என்றார். மின்வெட்டே இல்லாத மாநிலமா என்பது தெரியாது. ஆனால் மின்சாரமே இல்லாத மாநிலமாக ஜெயலலிதா தற்போது மாற்றிக்கொண்டிருக்கிறார்.
பொய்வழக்கு
நீங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே, திமுக முன்னணியினர் மீது, முன்னாள் அமைச்சர்கள் மீது, மாவட்டச் செயலாளர்கள் மீது பொய் வழக்கு போட்டீர்களே. நில அபகரிப்பு என்று சொல்லி பொய் வழக்கு போட்டீர்களே. இன்றைக்கு நான் அந்த அம்மையாரை பார்த்து கேட்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, உங்களிடத்திலேயே உள்ள அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் பதிவாகி இருக்கிறது.
அதிமுக அமைச்சர்கள்
சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன், புறம்போக்கு நிலஅபரிப்பு புகார், அமைச்சர் கேவி ராமலிங்கம் ஆள்கடத்தல், நிலஅபகரிப்பு புகார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சொத்து குவிப்பு வழக்கு. அமைச்சர் செந்தில் பாலாஜி, மிரட்டல் கடத்தல். அமைச்சர் கேசி வீரமணி, தமிழக சிறுபாண்மை அமைச்சர் முகமது கான், முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, பரஞ்சோதி என்றால் யார் என்று தெரியும் உங்களுக்கு பாலியல் பரஞ்சோதி. பரஞ்சோதியின் இரண்டாவது மனைவி டாக்டர் ராணி கொடுத்த புகார். ஆக இப்படி பல புகார்கள்.
பெங்களூரை தாண்டமுடியாது
இவர்களுடைய தலைவியாக இருக்கக் கூடிய ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய சோதனை வந்திருக்கிறது. பெங்களூரு சோதனை. அவர் சொல்லுகிறார். அதிமுக என்ற ரயில் வேக வேகமாக எக்ஸ்பிரஸ் போகும் வேகத்திலே செங்கோட்டையை நோக்கி டெல்லிக்கு போகபோகிறார்களாம். நான் சொல்லுகிறேன். அந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரையே தாண்ட முடியாது. இதுதான் உண்மை.
என்ன செய்தீர்கள்?
ஜெயலலிதா ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் மக்களை பார்த்து கேட்பது செய்வீர்களா... செய்வீர்களா... செய்வீர்களா... இதைத்தான் கேட்கிறார். நாமெல்லாம் ஒன்று சேர்ந்து அவரை என்ன கேட்க வேண்டும் என்று தெரியுமா? செஞ்சீங்களா... செஞ்சீங்களா... என்று கேட்கணும்.
மோடியை திட்டுவதில்லையே
ஜெயலலிதா, தனது பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை சாடுகிறார். பிரதமரை சாடுகிறார். மத்திய ஆட்சியை விமர்சிக்கிறார். திமுகவை விமர்சிக்கிறார். ஆனால், இதுவரையில் பாஜகவை விமர்சித்து பேசியது உண்டா. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பற்றி எங்கேயாவது, ஒரு வார்த்தை பேசியது உண்டா என்று கேட்டார்.
மவுனம் சம்மதம்
இதை பார்க்கும் போது பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் உறவு இருக்கிறது என்று நாடு நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறது. இதனை இதுவரை ஜெயலலிதா மறுக்கவே இல்லையே. நான் கேட்ட கேள்விக்கு ஜெயலலிதா வாய்திறக்கவே இல்லையே. ஆகவே இதிலிருந்து என்ன தெரிகிறது. மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று சொல்வார்களே. அதைத்தான் ஜெயலலிதாவின் விடையாக நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் ஸ்டாலின் கூறினார்.