ஜெகத்ரட்சகன் ஏன் அரசியலில் இருக்கிறார் தெரியுமா? அரக்கோணம் அதிமுக வேட்பாளர் சரமாரி குற்றச்சாட்டு
அரக்கோணம்: ஒரு திட்டத்தை கொடுத்தால் அது எல்லோருக்கும் சமமாக தர வேண்டும் என ரூ 1000 உரிமைத் தொகை எல்லாருக்கும் கிடைக்காததை அரக்கோணம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.விஜயன் வாலாஜாபேட்டை நகரத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு பிரச்சாரத்தை தொடங்கினார் தொடர்ந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ள டிபன் கடைக்கு சென்ற அவர் அங்கு பூரி சுட்டு வாக்குகளை சேகரித்தார்.
அதன் பின்னர் கரகாட்டம் கோலாட்டம், புலியாட்டம், கொக்கலி ஆட்டம், மற்றும் பல்வேறு மேளதாளம் பேண்ட் வாத்தியங்கள் முழங்க வாலாஜா நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அதிமுக வண்ணங்களுடன் கூடிய பலூன் கட்டிய மாட்டு வண்டியில் வேட்பாளர் விஜயன் முக்கிய சாலையின் வழியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பெண்கள் பலரும் ஆரத்தி எடுத்தும் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கூட்டத்தின் மத்தியில் வேட்பாளர் ஏ.எல்.விஜயன் பேசுகையில், அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையாக தரப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது.
ஆனால் அதன் பிறகு தகுதியான மகளிருக்கு மட்டுமே தரப்படும் என்று சொல்லப்பட்டது. அதுவும் 30 மாதமாக தராத நிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசிய பிறகு தரப்பட்டது.
மேலும் திமுகவினர் 520 தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். அதில் எதையுமே நிறைவேற்றவில்லை. எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் முழுமையாக செயல்படுத்தவில்லை. ஆனால் என்னை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஏற்கனவே 3 முறை எம்பியாக இருந்த போதும் ஒரு சின்ன துரும்பை கூட வாலாஜா பகுதிக்கு செய்யவில்லை.
திமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் இருவரும் வெளியூரை சேர்ந்தவர்கள் நான் மட்டுமே உள்ளூரை சேர்ந்தவன். குறிஞ்சி பூக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்கும். அதே போன்று திமுக ஜெகத்ரட்சகன் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தொகுதி மக்களை வந்து பார்க்கிறார். ஒரு திட்டம் எல்லோருக்கும் சமமாக செயல்படுத்த வேண்டும்.
ஆனால் அது போன்று திமுக செயல்படுத்தவில்லை திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மருத்துவமனையில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது பிணவறையிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்தனர். அவர் வரி கட்டுவதை தடுக்கவே அரசியலில் உள்ளார் என வேட்பாளர் விஜயன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பாமக வேட்பாளர் பாலுவும், ஜெகத்ரட்சகனை கடுமையாக விமர்சித்தார். மூன்று முறை எம்பியாக இருந்த ஜெகத்ரட்சகன், தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என கூறி அவரை திமுகவினரே பல இடங்களில் ஊருக்குள் விடவில்லை. தொகுதியை வளர்ச்சி பணிக்கு கொண்டு வர மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications