திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் சீனிவேல் மருத்துவமனையில் அனுமதி
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவேல் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்தமுறை அதிமுக போட்டியிடவில்லை. அப்போதைய கூட்டணிக் கட்சியான தேமுதிக சார்பில் ஏ.கே.டி.ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை இத்தொகுதியில் அதிமுக நேரடியாக களம் இறங்கியுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சீனிவேல் (65) இங்கு போட்டியிடுகிறார்.

சீனிவேல், கடைசியாக 2001-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்குப் பின் அவருக்கு இந்த தொகுதியில் வாய்ப்பு கிடைக்காததால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். கட்சியினரின் அதிருப்தியையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் சீனிவேல்.
இந்நிலையில், அவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சீனிவேல் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். தற்போது அவரின் உடல் நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications