அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் சின்னதுரை மாற்றம்- கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டதாக அறிவிப்பு!!
சென்னை: அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சின்னதுரை திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏ.கே. செல்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சின்னதுரையை அதிமுகவில் இருந்தும் நீக்கி முதல்வரும் அக்கட்சி பொதுச்செயலருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பிப்ரவரி 7-ந் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவின் சார்பில் சின்னதுரை உட்பட 4 பேர் போட்டியிடுவர் என்று அக்கட்சி பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சின்னதுரை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்த போது ரூ.2 கோடி முறைகேடு செய்ததாக முன்பு கூறப்பட்ட புகார் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.
காரணம் என்ன?
2008-10ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக சின்னதுரை இருந்த போது ரூ2 கோடி முறைகேடு செய்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பும் விசாரணை நடத்தி முறைகேடு நடந்ததை உறுதிப்படுத்தியது. பின்னர் நீதிமன்றம் மேல்நடவடிக்கைக்கு உத்தரவிட்டு பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனிடையே சின்னதுரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் நேற்று மீண்டும் சின்னதுரை மீது நடவடிக்கை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கட்சியில் இருந்தே நீக்கம்
இதைத் தொடர்ந்து இன்று சின்னதுரையை மாற்றிவிட்டு அதிமுக அமைப்புச் செயலரான ஏ.கே. செல்வராஜை வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அத்துடன் சின்னதுரையை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பொறுப்பில் சின்னதுரை இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications