மதுரையில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: பழிக்குப் பழியா?
மதுரை: மதுரையில் அதிமுக பிரமுகர் ஒருவர் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்தவர் மயில்முருகன் (வயது40). அ.தி.மு.க. 72-வது வட்ட மேலமைப்பு பிரதிநிதியாகவும், ஜனதா கூட்டுறவு சங்க இயக்குனராகவும் இருந்து வந்தார். மயில்முருகன் இன்று காலை தனது வீட்டில் இருந்து முனிச்சாலையில் உள்ள தனது அலுவலகத்திற்கு நடந்து வந்தபோது ஒரு ஆட்டோவில் 7 பேர் கொண்ட கும்பல் விரைந்து வந்து அவரை சுற்றி வளைத்தனர்.
அப்போது மயில்முருகன் தப்ப முயன்றபோது அந்த கும்பல் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயில்முருகன் அதே இடத்தில் துடிதுடித்து செத்தார். அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் முனிச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மயில்முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலையுண்ட மயில் முருகனுக்கு மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
பழிக்குப் பழி
மயில்முருகன் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திங்களன்று மதுரை கீழமாரட் வீதி தி.மு.க. பிரமுகர் குருசாமியின் உறவினர் கஜேந்திரபாண்டி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் 3 பேர் சரணடைந்தனர். இதில் கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்ட மயில்முருகனின் சகோதரி மகன் ஆவார்
தொடர் கொலைகள்
எனவே இந்த முன்விரோதத்தில் அந்த கும்பல் பழி வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆட்டோவில் தப்பி சென்ற கொலை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி பல்வேறு பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
கடந்த 3 நாட்களில் நடந்த தொடர் கொலைகளால் முனிச்சாலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications