அம்மா நல்லாயிருக்காங்க... இலவச மோர், சாலட் கொடுக்கும் அதிமுக தொண்டர்கள்
அம்மா நல்லாயிருக்கா... நோயெல்லாம் குணமாயிருச்சு... சந்தோசமா மோர் சாப்பிடுங்க என்று நீர் மோரும், காய்கறி சாலட்டும் இலவசமாக கொடுத்து உற்சாகப்படுத்துகின்றனர் ஜெயலலிதா விசுவாசிகள்.
சென்னை: ஜெயலலிதா எப்படியிருக்கிறார் என்று அப்பல்லோ வாசலில் யாராவது அதிமுக நிர்வாகியிடம் கேட்டால், அம்மா நல்லயிருக்காங்க. இப்போதைக்கு அவங்களுக்கு தேவை ரெஸ்ட்தான். பேப்பர் படிக்கிறாங்க என்றெல்லாம் சொல்லி சோர்ந்து கிடக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.
செப்டம்பர் 22ம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. 57 நாட்களாக ஜெயலலிதாவிற்கு என்னவாயிற்று என்பதுதான் மக்களின் கவலையாக உள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பிசியோதெரபிஸ்ட் நிபுணர்கள் சிகிச்சை அளித்ததில் ஜெயலலிதாவின் உடல்நிலை குணமடைந்து வருவதாக டாக்டர் பிரதாப் ரெட்டி கடந்த 4ம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார். அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு பல நாட்களாகிவிட்டது.

தொண்டர்கள் பிரார்த்தனை
அதிமுக தொண்டர்களின் வேண்டுதல்களும் பிரார்த்தனையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆலயங்களில் தேங்காய்களை உடைத்தும் மொட்டை போட்டும், யாகங்கள் நடத்திலும் சக்திக்கு ஏற்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அம்மா நலம்
தினசரியும் யாராவது ஒரு அரசியல் கட்சித் தலைவரோ, சினிமா பிரபலமோ அப்பல்லோவிற்கு வந்து நலம் விசாரித்து விட்டு செல்வது வாடிக்கையாகிவிட்டது. சில்லறை நோட்டு தட்டுப்பாடு பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் அதிமுக தொண்டர்கள் பலரும் அப்பல்லோ வாசலில் காத்திருக்கின்றனர். அம்மா நலம் என்று யாராவது கூறினாலே போதும், மருத்துவமனை வாசலில் இருக்கும் தொண்டர்களுக்கு உற்சாகமாகிவிடுகிறது.

நீர்மோர், சாலட்
இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அதில் தொண்டர்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்து விட்டதாக கூறினார் ஜெயலலிதா. இந்த அறிக்கையும், ஜெயலலிதாவின் கையெழுத்தும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவே, அதே மகிழ்ச்சியில் நீர்மோர், சாலட் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.

எல்லாமே மாறிப்போச்சு
கடந்த 50 நாட்களாக சோகத்தில் ஆழ்ந்திருந்த அதிமுக தொண்டர்கள், மகளிரணியினர் இப்போதெல்லாம் உற்சாமாக வலம் வருகின்றனர். அவர்களின் நடை, உடை பாவனைகள் மாறிவிட்டன. அம்மா சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்க என்பதே பேச்சாக இருக்கிறது. அதே நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் ஓபிஎஸ், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே தாடியுடன் லேசாக சோகம் அப்பிய முகத்துடன் வலம் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications