மழையில் நனைந்தபடி காத்திருந்து போயஸ் கார்டனில் கொண்டாட்டம் நடத்திய அதிமுகவினர்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்துள்ள நிலையில் சென்னையில் அவரது போயஸ் கார்டன் வீட்டு முன்பாக நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து கொட்டும் மழையிலும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பில் காலையில் இருந்தே நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சென்னை போயஸ் கார்டன் வீட்டு முன்பு குவிந்தனர்.

இந்நிலையில் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நேரத்தில் இருந்து மழை அதிக அளவில் கொட்டித் தீர்க்க தொடங்கியது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போயஸ் கார்டன் வீட்டு முன்பு ஆண், பெண் தொண்டர்கள் நனைந்தபடி காத்திருந்தனர். அவர்கள், கைகளில் பட்டாசு, வெடி போன்றவையும் இருந்தன. வெடி மழையால் நமத்துப்போகாமல் இருக்க ஓரிடத்தில் குவித்து வைத்திருந்தனர்.

கர்நாடக ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தபோதும் ஜாமீன் கிடைக்காமலேயே கிடைத்துவிட்டதாக பரவிய வதந்தியால் பட்டாசு வெடித்து போயஸ்கார்டனில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை என்றதும் சோகமடைந்தனர். ஆனால் இம்முறை ஜாமீன் செய்தி உறுதியானதும், கொட்டும் மழையிலும் பட்டாசு வெடித்து, இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications