"அம்மா"வுக்காக 350 கிலோமீட்டர் "வாக்கிங்".. இது ராமாபுரம் "மதில்" பெருமாளின் கதை!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்காக அதிமுகவினர் விதம் விதமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்ற தொண்டர் ஜெயலலிதா விடுதலை கோரி அக்டோபர் 1ம் தேதி பாத யாத்திரை ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
சென்னை முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா வரை 350 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே வந்து அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பெருமாள். அவருடன் இன்னொரு தொண்டரும் சேர்ந்து நடந்து வருகிறார்.
மற்ற தொண்டர்களைப் போல வன்முறையில் ஈடுபடாமல், பஸ்களை எரிக்காமல், கடைகளை மூடச் சொல்லி மிரட்டாமல் தன்னை மட்டும் வருத்திக் கொண்டு ஜெயலலிதாவுக்காக இந்த இரு தொண்டர்களும் பாதயாத்திரையை அமைதியான முறையில் மேற்கொண்டுள்ளனர்.

மதில் பெருமாள்
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் மதில் ஆர். பெருமாள். 36 வயதாகும் இவர் 5வது வார்டு அதிமுக செயலாளராக இருக்கிறார். இதேபோல இன்னொரு கட்சித் தொண்டர் சேவியர். இருவரும் சேர்ந்து தற்போது ஜெயலலிதாவுக்காக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

கருப்பு உடையில்
கருப்பு உடை அணிந்தபடி, கையில் அதிமுக கொடியைப் பிடித்தபடி, அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளரும், எங்களது இதய தெய்வம் புரட்சித் தலைவி, அம்மா அவர்களுக்காக நீதி கேட்டு, அறவழி நடைப்பயணம், பெங்களூர் முற்றுகை என்ற வாசகம் அடங்கிய பேனரைக் கையில் ஏந்தியபடி இருவரும் நடந்து வருகின்றனர்.

அக்டோபர் 1ம் தேதி முதல்
அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த நடைப்பயணம் தொடங்கியுள்ளது. அன்றுதான் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

அம்மாவுக்கு நீதி வேண்டும்
இதுகுறித்து சேவியர் கூறுகையில், அம்மாவுக்கு நீதி வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் தவறாக தண்டிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல விரும்புகிறோம். அமைதி வழியில் அம்மாவுக்கு நாங்கள் தெரிவிக்கும் ஆதரவு இது. வெறும் கால்களுடன் சென்னையிலிருந்து நடந்து வருகிறோம் என்று அவர்கள் கூறினர்.

இன்னொருவரும் இணைந்தார்
இவர்களது நடைபயணத்தால் ஈர்க்கப்பட்டு 29 வயதான செளந்தரராஜன் என்ற தொண்டரும் தற்போது இவர்களுடன் இணைந்துள்ளார்.

பூந்தமல்லியிலிருந்து
செளந்தரராஜன் ஒரு பெயிண்டர் ஆவார். இவர் பூந்தமல்லியிலிருந்து நடைபயணத்தில் இணைந்துள்ளார்.

சொகுசு கார் தொண்டர்களுக்கு மத்தியில்!
சென்னையிலிருந்து பெங்களூருக்கு சொகுசு கார்களிலும், ஏசி பஸ்களிலும் சர் புர்ரென்று பறந்து பறந்து சீன் போட்டுக் கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு மத்தியில், இந்த தொண்டர்களின் உண்மையான வருத்தம் தோய்ந்த அமைதிப் போராட்டம் அதிமுகவினர் மத்தியிலும் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாளைக்கு 60 கிலோமீட்டர்
இவர்கள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் வரை நடக்கின்றனராம். சுட்டெரிக்கும் வெயிலைக் கூட இவர்கள் பொருட்படுத்துவதில்லை. அமைதியான முறையில் தேவையில்லாமல் பேசாமல் சோக முகத்துடன் நடந்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரியைக் கடந்தனர்
இன்று காலை இவர்கள் கிருஷ்ணகிரியைக் கடந்து விட்டனர். நாளை இரவுக்குள் பரப்பன அக்ரஹாரா சிறையை சென்றடைவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

"அம்மா" விடுதலையாகும் வரை வர மாட்டோம்
"அம்மா ஜாமீனில் விடுதலையாகும் வரை நாங்கள் சிறைக்கு முன்புதான் இருக்கத் திட்டமிட்டுள்ளோம். அவர் வெளியே வரும் வரை நாங்கள் அந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications