ஆட்சி எங்களால் கலையாது... நாளைக்கு நல்ல செய்தி வரும் - ஓபிஎஸ்
நாளை அல்லது நாளை மறுநாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அணிகளை இணைக்க எந்த நிபந்தனையும் நாங்கள் வைக்கவில்லை என்றும் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி இரு தினங்களில் வரும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
பிளவுபட்டுள்ள அதிமுக அணிகளை இணைக்க இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இணைப்பு பற்றி நேற்றே அறிவிப்பு வெளியாகும் என்று தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் இழுபறியால் இணைப்பு தள்ளிப்போனது.

இந்த சூழ்நிலையில் இன்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது அணியினருடன் ஆலோசனை நடத்தினார். காலையில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு தினங்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். அதிமுக இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மாலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், நாளை அல்லது நாளை மறுநாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும் என்றார்.
எங்கள் பேச்சுவார்த்தையில் எந்த நிபந்தனையும் இல்லை. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு நாங்கள் தரும் அறிக்கையில் எல்லா விவரமும் தருவோம் என்றார்.
ஆட்சி எங்களால் கலையாது என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications