எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த விவகாரத்தில், தவெக மீது அதிமுக எம்பி இன்பதுரை கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சபாநாயகர் ராஜினாமாவை ஏற்பதற்கு முன்பே, அவர்கள் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து கட்சியில் இணைக்கப்பட்டதாகவும், இது திட்டமிட்ட '100 சதவீதம் குதிரை பேரம்' என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அப்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் இருந்து 20 எம்.எல்.ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள்
இதனால் அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு அணி உருவானது. விஜய்க்கு ஆதரவு அளித்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விஜய் அமைச்சரவையில் இடம் கொடுப்பார் என தகவல் வெளியானது. ஆனால் விஜய் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த இருவருக்கும், காங்கிரசில் இருவருக்கும் என 4 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளித்தார்.
இந்த நிலையில் தான் விஜய்க்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்களில் 5 பேர் எடப்பாடியை சந்தித்தனர். இதனையடுத்து தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். மதுராந்தகரம் மரகதம் குமராவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். மூன்று பேருமே வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்தனர்.
அதிமுக கடும் விமர்சனம்
இதனை தொடர்ந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த அவர்கள் 3 பேரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தவெக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. சபாநாயகர் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்க கூட இல்லை அதற்குள் தவெகவில் இணைந்துவிட்டதாக அதிமுக எம்பி இன்பதுரை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
"அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுணாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை. இது 100 சதவீத குதிரை பேரம்!" என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், அமமுக டிடிவி தினகரன் என பலரும் விஜய்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் கூறுகையில், 'குதிரை வேக'த்தில் நடக்கும் 'குதிரை பேரம்' என்றும், இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? தூயசக்தி என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், துயரசக்தி என அம்பலப்பட்டிருக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
டிடிவி தினகரன் கூறுகையில், ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெகவின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அம்மாவின் தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது” என்று பதிவிட்டு இருந்தார்.














Click it and Unblock the Notifications