ஜெ. செல்வாக்கு சரிவு; ஆதரவு 33%: திமுகவுக்கு 49% ஆதரவு- தந்தி டிவி கருத்துக் கணிப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களை இன்று காலையிலிருந்து தொடர்ந்து சந்தித்துப் பேசி வந்த விஜயகாந்த்தின் செயல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தந்தி டிவியில் வெளியான ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பு முடிவைத் தொடர்ந்து விஜயகாந்த்தின் இந்த சந்திப்பு அமைந்திருப்பதால் புதிய எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
தந்தி டிவி நடத்திய இந்த கருத்துக் கணிப்பில் மக்கள் மத்தியில் 4 ஆண்டு கால அதிமுக அரசுக்கு செல்வாக்கு வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும், நாளையே தேர்தல் வந்தால் மக்கள் திமுகவுக்கே வாக்களிப்பார்கள் என்றும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவு வெளியான அடுத்த நாளே கருணாநிதியைச் சந்தித்துள்ளார் விஜயகாந்த். மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்துள்ளார் என்ற போதிலும் கருணாநிதியுடனான சந்திப்புதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உண்மையில், கருணாநிதியுடன், விஜயகாந்த் என்ன பேசினார் என்பதுதான் இங்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவி கருத்துக் கணிப்பு
தந்தி டிவி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த ஆன்லைன் கருத்துக் கணிப்பில் நான்கரை ஆண்டு கால அதிமுக அரசு குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதன் முடிவுகளை அந்த டிவி வெளியிட்டுள்ளது.

அதிமுக அரசுக்கு செல்வாக்கு சரிவு
இந்த கருத்துக் கணிப்பில் மொத்தம் 7519 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். அதில், அதிமுக அரசுக்கு ஆதரவாக 33 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. திமுகவுக்கு ஆதரவாக 49 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. மாற்று கூட்டணி என்ற பிரிவில் மற்றவர்கள் வாக்களித்துள்ளனர்.

எல்லாமே தப்பா இருக்கு
இந்த சர்வேயைப் பார்த்தால் அதிமுக அரசுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். எல்லாமே தப்பாகப் போய்க் கொண்டிருப்பதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பு உணர்த்துகிறது.

மாற்றுக் கூட்டணிக்கு மகத்தான வாய்ப்பு
இந்தக் கருத்துக் கணிப்பைப் பார்த்தால் அதிமுக தவிர்த்த மாற்றுக் கூட்டணிக்கு வருகிற சட்டசபைத் தேர்தலில் நல்ல வாய்ப்பு உள்ளது தெரிகிறது. அதாவது திமுகவுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக கருத இது இடம் கொடுக்கிறது.

விவரம் இல்லை
ஆனால் இந்த சர்வேயில் எத்தரப்பினர் அதிமுக அரசு மீது அதிருப்தியுடன் உள்ளனர், எந்தெந்த வயதினர் அதிருப்தியாக உள்ளனர் போன்ற விரிவான விவரம் எதுவும் இல்லை. இதனால் அதிமுக அரசு மீது யார் யாரெல்லாம் அதிருப்தியுடன் உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா பதவி விலகியது முதலே
இருப்பினும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி கைதாகி ஜெயலலிதா சிறை சென்ற பின்னர் அதிமுக அரசு மீதான மக்களின் செல்வாக்கு குறையத் தொடங்கி விட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஸ்திரமற்ற நிலையில் கட்சியும், ஆட்சியும்
ஜெயலலிதா பதவியில் இல்லாததால் தமிழக அரசும், கட்சியும் ஸ்திரமில்லாமல் இருப்பதாகவும், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பொறுப்பே இல்லாத அமைச்சர்கள்
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைத் தவிர மற்ற அமைச்சர்கள் பெரும்பாலும் தலைமைச் செயலகத்திற்கு வருவதில்லை என்கிறார்கள். அரசு இயந்திரம் இயங்குகிறதா இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

பூஜைகளில்தான் கவனம்
அமைச்சர்களும், அதிமுகவினரும் ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என்று வேண்டி பூஜைகள் நடத்துவது, தீச்சட்டி ஏந்துவது, பால்குடம் சுமப்பது, வேல் குத்துவது என்று பிசியாக உள்ளனரே தவிர மக்கள் பணிகளில் யாரும் ஈடுபடுவதாகவே தெரியவில்லை என்று மக்கள் புலம்புகிறார்கள்.

முத்துக்குமாரசாமி விவகாரம்
பல்வேறு கெட்ட பெயர்களையும் இந்த அரசு சம்பாதித்துள்ளது. குறிப்பாக வேளாண் உதவி செயற் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரம் அரசு ஊழியர்கள் மத்தியில் அரசுக்கு பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது.

இதெல்லாம் கப்சா
இந்த ஆன்லைன் கருத்துக்கணிப்பு குறித்து அதிமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், இது எதிர்க்கட்சிகளின் கை வேலை. இதை நாங்கள் எப்போதுமே நம்புவதில்லை. மேலும் கம்ப்யூட்டருடனேயே இருக்கும் யாரும் வாக்குச் சாவடிக்கு வருவதில்லை. அதிமுகவின் வாக்கு வங்கி பெண்கள்தான். பெண்கள் எப்போதுமே அம்மாவுக்கு ஆதரவாகவே உள்ளனர். மவுஸை கிளிக்கிக் கொண்டிருப்போரை விட, வாக்குச் சாவடிகளுக்கு வந்து அம்மாவுக்கு விசுவாதத்தைக் காட்டுவதில் பெண்கள் எப்போதுமே தவறுவதில்லை என்றார் அவர்.

உற்சாகத்தில் திமுக
ஆனால் திமுக தரப்போ உற்சாகமாக உள்ளது. காரணம், கடந்த முறை தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் கிட்டத்தட்ட சரியாக அமைந்தன. எனவே இந்த முடிவும் சரியாக இருக்குமானால் திமுகவுக்கு பெரும் வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி கருதுகிறது.

விஜயகாந்த் விஜயம்
இந்தப் பின்னணியில்தான் விஜயகாந்த் இன்று அதிரடியாக தலைவர்களைப் பார்த்துள்ளார். இந்த கருத்துக் கணிப்புக்கும், விஜயகாந்த்தின் திடீர் சுறுசுறுப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

வழக்கத்திற்கு விரோதமாக
வழக்கமாக தனது கட்சி அலுவலகத்தை தாண்டி யாரையுமே பார்ககாதவர் விஜயகாந்த். மூத்த தலைவரை சந்திக்க வந்தேன் என்று கூறும் விஜயகாந்த், இதுவரை கருணாநிதியைத் தேடிப் போய்ப் பார்த்ததே இல்லை. மேலும் வாசன், திருமாவளவன், தமிழிசை என யாரையும் விடாமல் அவர் பார்த்துள்ளார். இது பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

சாதகமாக்க முயற்சியா
அதிமுவுக்கு எதிரான சக்திகளைத் திரட்டி அதை தனக்கு சாதகமாக்க விஜயகாந்த் முயற்சிக்கிறாரா அல்லது உண்மையிலேயே மக்கள் பிரச்சினையைத் தீர்க்க முயல்கிறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications