ஓ.பி.,எஸ்-ன் 'தமிழ்நாடு முதலமைச்சர்' பதவியை நிதி,பொதுப்பணி துறை போல ஒரு "இலாகா'வாக கருதுகிறாரோ ஜெ.?
சென்னை: ஒரு மாநில முதல்வர் வசம் பல இலாகாக்கள் இருக்கும்.. அதனால் பொதுவாக முதலமைச்சர் என்றுதான் குறிப்பிடுவது வழக்கம்.. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, உட்கட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓ. பன்னீர்செல்வம், நிதி மற்றும் பொதுப்பணித்துறை, தமிழக முதலமைச்சர் என்று குறிப்பிட்டிருப்பது 'முதல்வர்' பதவியை ஒரு இலாகாவாகத்தான் கருதுகிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
அ.தி.மு.க. அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 11 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி வரை 14 கட்டங்களாக நடைபெற உள்ளது. எனவே அமைப்புத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தற்போது அறிவித்துள்ளார்.

அதன்படி, அமைப்பு தேர்தலுக்கான மண்டல, மாவட்ட மற்றும் பிற மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களையும் அவர் நியமித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓ.பன்னீர் செல்வம்
முதல்வரும், கட்சிப் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு, வட சென்னை வடக்கு, வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, தேனி மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நத்தம் விஸ்வநாதன்
அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு, ஈரோடு புறநகர், மதுரை மாநகர், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி.
ஆர்.வைத்திலிங்கம்
அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், கடலூர் மேற்கு, திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை.
எடப்பாடி.கே.பழனிச்சாமி
அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாநகர், திருப்பூர் புறநகர், சேலம் புறநகர், கோவை மாநகர், நாமக்கல்,கோவை புறநகர், ஈரோடு மாநகர்,நீலகிரி, திருப்பூர் மாநகர்,கரூர்.
பழனியப்பன்
அமைச்சர் பழனியப்பன், வேலூர் கிழக்கு,விழுப்புரம் வடக்கு, வேலூர் மேற்கு, விழுப்புரம் தெற்கு, திருவண்ணாமலை வடக்கு,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை தெற்கு, தருமபுரி, கடலூர் கிழக்கு, மதுரை புறநகர்.
மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள்
மேலும், அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 50 பேர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளளனர்.
வெளி மாநிலங்களில்
கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், அந்தமான், புதுச்சேரி, புதுடெல்லி, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாகச் செயல்படுகிறது என்பதால் அங்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பொறுப்பு?
இந்த அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம், கழகப் பொருளாளர், கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். அதாவது நிதித்துறையை போல 'தமிழ்நாடு முதலமைச்சர்' பொறுப்பும் ஒரு 'இலாகாதான்' என்பதுபோல ஜெயலலிதாவின் அறிக்கை தெரிவிக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications