அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்கள் பக்கம்.. கோவை கூட்டத்தில் ஓ.பி.எஸ் உரை
கோயம்புத்தூர்: கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் தங்கள் அணி பக்கம் இருப்பதாக தெரிவித்தார்.
கோயம்புத்தூர் கொடீசியா வளாகத்தில், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் கூட்டம் இன்று நடைபெற்றது. திரளான தொண்டர்கள் அதில் பங்கேற்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், நாங்கள் மேற்கொண்ட தர்ம யுத்தம் வெற்றி இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் தங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருவதை போல கோவையிலும் பிரமாண்டமாக கூட்டம் நடைபெற்றுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கோவை கொங்கு மண்டலம் எப்போதுமே, அதிமுக எஃகு கோட்டையாக விளங்கி வருவதாக ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.
#OPSinCoimbatore pic.twitter.com/oRvai1Dm04
— O Panneerselvam (@OfficeOfOPS) July 29, 2017
நமது அணி பலவீனமாகிவிட்டது போன்ற தோற்றத்தை சில ஊடகங்கள் மூலமாக உருவாக்க முயன்றனர். பன்னீர்செல்வம் தனிமரமாகிவிட்டதை போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்றனர். அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம், கோவைக்கு வாருங்கள், வந்து இக்கூட்டத்தை பாருங்கள். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
அதிமுக அம்மா அணியின் பக்கம், வெறும், சட்டமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும், மட்டுமே இருக்கிறார்கள். தமிழக மக்கள், நமது பக்கம் இருக்கிறார்கள். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் நம் பக்கம் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், திமுக தலைவர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோது, காவிரி விவகாரத்தில், தனது கடமையை சரியாக செய்யவில்லை என மறைந்த முதல்வர் ஜெயலலிதா பலமுறை சுட்டிக்காட்டியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.