‘162’ அரசாணை! ஆளுநர் மாளிகையிலிருந்து 10 போன்! எடுக்காத எடப்பாடி பழனிசாமி! தளவாய் சுந்தரம் தகவல்
நாகர்கோவில்: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய போது ஆளுநர் மாளிகையில் இருந்து 10 முறை போன் செய்து எடப்பாடி பழனிசாமி எடுக்காமல் அரசாணை வெளியிட்டார் என அதிமுக மூத்த தலைவர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் வடசேரியில், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி சார்பாக அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுர விநியோக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., பேசுகையில், ஊழலை ஒழிப்பேன் என்று கூறும் ஒருவர், ஊழல் வழக்கில் 90 நாட்கள் சிறையில் இருந்த செங்கோட்டையனுடன் இணைந்திருப்பது எப்படி?

அந்த சிறைவாசம் ஒரு 'நடிப்பு'தான். அதை நான் நேரில் கண்டேன். அரசியலுக்கு வருவதையும், கட்சி தொடங்குவதையும் வரவேற்கிறேன். ஆனால் அனாவசிய பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும்.
இந்தியாவிலேயே ஒரு நடிகரை பார்க்கச் சென்றபோது 41 பேர் உயிரிழந்தனர். அதனைப் பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்டவர் வீட்டில் முடங்கியது கண்டிக்கத்தக்கது. 41 மரணங்களைக் கூட கண்டுகொள்ளாத கட்சி தவெக.
'தவெக'வைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா பேசுவதெல்லாம் பொய்; அவரது பேச்சைக் கேட்டால் சிரிப்புதான் வரும். எங்கள் தலைவரைக் கைது செய்து பாருங்கள்" என சவால் விடுக்கிறார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் உங்கள் (விஜய்) கதை என்னவாகியிருக்கும்?".
இதற்கு உதாரணமாக, 2002-இல் ராமதாஸ் இரவு 10 மணிக்கு மேல் பொதுக் கூட்டத்தில் பேசுவேன், என்னைக் கைது செய்யட்டும் என சவால் விடுத்தார். மறுநாளே சட்டமன்றத்துக்கு வந்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, "ராமதாஸின் ஆசைப்படி அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என அறிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தைரியமானவர். அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் டெல்லிக்கு சென்றபோது, ஆளுநரைச் சந்திக்கச் சொல்லி கோரப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி உடனடியாகப் பிரிவு 162-ஐப் பயன்படுத்தி அரசாணையைப் பிறப்பித்தார்.
இப்பிரிவின் கீழ் முதலமைச்சருக்கு ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே அரசாணை பிறப்பிக்க தனி அதிகாரம் உள்ளது. இந்த பவரை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக ஆளுநர் அலுவலகத்திலிருந்து 10 முறை தொலைபேசி அழைப்புகள் வந்தபோதும், அப்போதைய முதலமைச்சர் அவற்றை ஏற்கவில்லை என்றும் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications