அதிமுக கூட்டணி அமைத்தால்.. யார் சேர வருவார்கள்?
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தொக்கி நிற்கிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பிராதன கட்சியாக தேமுதிக இருந்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலின்போது, தனித்தே தேர்தலை சந்திப்பதாக அறிவித்த ஜெயலலிதா அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.
ஜெயலலிதா கணக்குப்படியே, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களிலுள்ள 40 மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்று அசத்தியது அதிமுக.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முதல்முறையாக, கூட்டணி பற்றி, ஜெயலலிதாவை குழப்பம் எட்டிப்பார்த்துள்ளது.

எதிரிகள்
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற கூட்டணி அவசியம் என்று உணர்ந்ததால்தான், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளையே காணோம் என்று கூறிவந்த ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என்று, சமீபத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் அறிவித்தார்.

அதிமுகவுக்கு சிக்கல்
இந்நிலையில்தான், ஒரு சிக்கல் அதிமுகவுக்கு எழுந்துள்ளது. அதிமுக கூட்டணி கதவுகளை திறக்காது என்று நினைத்த சில கட்சிகள், மக்கள் நல கூட்டணியில் இணைந்துள்ளன. போதிய சீட் தரமாட்டார் என்று நினைக்கும் கட்சிகள் எங்கும் போகாமல் இருக்கின்றன.

திமுகவோடு செல்ல தயக்கம்
அதேநேரம், கடந்த ஓராண்டாகவே, எந்த கட்சியுடனும் கூட்டணி என்ற அழைப்பை திமுகவிடுத்துவிட்டது. இருப்பினும் திமுகவுடன் சேர பல கட்சிகள் தயக்கம் தெரிவிக்கின்றன. காங்கிரசும், இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் அதிகாரப்பூர்மாக கூட்டணியில் சேர்ந்துள்ளன.

யார் செல்வார்கள்
தேமுதிக, ஜெயலலிதா பக்கம் வராது, இவர்களும் அழைக்கப்போவதில்லை. முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்ட பாமகவாலும் ஜெயலலிதா பக்கம் போக முடியாது. இதை தவிர்த்து பெரிய கட்சிகள் என்றால், பாஜக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்.

தனித்து உள்ளன
பாஜக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளையும், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழர் வாழ்வுரிமை கட்சி, குடியரசு கட்சி ஆகியவை சேர முடியும். இருப்பினும் பாஜக தனித்து செயல்படும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியவை மக்கள் நல கூட்டணியில் உள்ளன.

டிமாண்ட் போச்சா
இந்நிலையில், அதிமுகவால் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற விவகாரத்தில் இன்னமும் ஒரு முடிவை எட்ட முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் அக்கட்சி இன்னும் முழு வீச்சில் தேர்தல் நடவடிக்கையில் இறங்க முடியாமல் உள்ளது. வழக்கமாக, திமுக, அதிமுகவுக்கு தேர்தல் கூட்டணியில் பெரும் டிமாண்ட் இருக்கும். முதல்முறையாக இத்தேர்தலில் இரு கட்சிகளைவிட்டும் பல கட்சிகள் விலகி நிற்கின்றன.












Click it and Unblock the Notifications