பொத்து பொத்துன்னு உடையும் கண்ணாடி.. "பூதர் கூடமாகும்" சென்னை ஏர்போர்ட்.. பொன் விழாவை நோக்கி!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய முனையங்களின் தானியங்கி கதவானது 36ஆவது முறையாக உடைந்து விழுந்துள்ளது பயணிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதில் இது எத்தனையாவது முறை என்றும், இது 35 இல்லை, இல்லை 36 என்ற பட்டிமன்றங்களும் பயணிக்களுக்கிடையே நடைபெற்று வருகின்றது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 11 முறை மேற்கூரைகள் இடிந்து விழுந்து உள்ளன. 9 முறை கண்ணாடி கதவுகள் உடைந்தும், 9 முறை தடுப்பு கண்ணாடிகள் நொறுங்கியும் விழுந்து உள்ளன.
5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்தும் உள்ளன. இவ்வாறு 34 முறை நடைபெற்ற இந்த சம்பவங்களில் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பகல் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் உள்ள 8 அடி உயரம் மற்றும் 4 அடி அகலம் கொண்ட தானியங்கி கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தது.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் மருத்துவமனை ஊழியர் அருண்சிங் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் உள்நாட்டு முனையம் வருகை பகுதிக்கு கோவை, பெங்களூரு ஆகிய ஊர்களில் இருந்து வந்த பயணிகள், இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 35 ஆவது முறையாக நடைபெற்ற இந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக இவர்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இது பற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு உடைந்து விழுந்த கண்ணாடி சிதறல்களை அப்புறப்படுத்தினார்கள்.
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "தனியார் மருத்துவமனை ஊழியர் கண்ணாடி கதவை பிடித்து இழுத்ததால் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம். இது பற்றி முறைப்படி விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் கண்ணாடிகள், மேற்கூரை உள்ளிட்டவைகள் உடைந்து விழும் சம்பவங்களால் பயணிகள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications