54வது வாட்டி உடைஞ்சு போன சென்னை விமான நிலைய மேற்கூரை... இந்த முறை 2 ஊழியர்கள் காயம்!
ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 54வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு விமான நிலைய ஊழியர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுவரை 13 முறை மேற்கூரைகள் இடிந்து விழுந்து உள்ளன. 18 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 15 முறை தடுப்பு கண்ணாடிகளும் உடைந்து விழுந்து உள்ளன. 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்தும், ஒரு முறை விளக்கு கண்ணாடி உடைந்து விழுந்தும் உள்ளன. இதுவரை 52 முறை நடைபெற்று உள்ள இந்த உடைப்பு சம்பவங்களில் 8 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
நேற்று 53:
இந்த நிலையில் 53 ஆவது முறையாக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி அருகே 13 ஆவது நுழைவு வாயிலில் உள்ள 7 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட தானியங்கி கண்ணாடி கதவு ஒன்று நேற்று மதியம் திடீரென உடைந்து விழுந்து நொறுங்கியது.
மும்பை பயணி காயம்:
அப்போது அந்த வழியாக சென்ற மும்பை பயணி ஒருவரின் கையில் கண்ணாடி சிதறல்கள் பட்டு காயம் ஏற்பட்டது. இதை கண்ட விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அள்ளிச் சென்ற அதிகாரிகள்:
சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட அதிகாரிகள், நொறுங்கி கிடந்த கண்ணாடிகளை அகற்றினார்கள். மேலும் காயம் அடைந்த பயணிக்கு விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இன்று 54:
இந்நிலையில் இன்று சென்னையில் மழை கொட்டி வருகின்ற நிலையில் உள்நாட்டு முனையம் அமைந்துள்ள பகுதியில் இன்று மீண்டும் மேற்கூரை ஒன்று இடிந்து விழுந்தது.
காயமடைந்த ஊழியர்கள்:
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த விமான நிலைய ஊழியர்கள் இரண்டு பேர் இவ்விபத்தில் காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வழக்கம்போல:
இந்நிலையில் வழக்கம்போல இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 54வது முறையாக நடந்துள்ள இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்னும் சொல்றதுக்கில்லை!