பந்தா காட்டனும்! சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. அகில பாரத இந்து மகாசபை நிர்வாகி அதிரடி கைது
கள்ளக்குறிச்சி: அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளர் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் பெரி செந்தில். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதாவது, கடந்த 2015ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இவரது கார் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அதேபோல 2018ம் ஆண்டும் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கிறது.

இந்த சம்பவங்கள் நடந்து பல நாட்கள் ஆன நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி இவரது வீட்டில் திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இதில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, முதலில் பெரி செந்திலின் செல்போன் அழைப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சென்னையை சேர்ந்த மாதவன் எனும் நபரிடம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு முன்பு அடிக்கடி போனில் பெரி செந்தில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மாதவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், உண்மைகள் பல வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அதாவது, தன்னை பந்தாவாக காட்டிக்கொள்ளவும், மீண்டும் போலீஸ் பாதுகாப்பை பெற்று பாஜகவின் மாநில, தேசிய நிர்வாகிகள் மத்தியில் தன்னுடைய பெயரை கொண்டு செல்லவும் பெரி செந்தில், அவரது தம்பி ராஜீவ் காந்தி மற்றும் அவருடைய மகன் மணிகண்ட சந்துரு ஆகியோர் திட்டம் ஒன்றை போட்டிருக்கிறார்கள். அதன்படி, தங்களது வீட்டுக்கு தாங்களே பெட்ரோல் குண்டை வீசுவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த முடிவை அமல்படுத்த மாதவன் சென்னையிலிருந்து வரவைக்கப்பட்டிருக்கிறார். திட்டமிட்டபடி மாதவன் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதை பெரி செந்தில் வீட்டினுள் வீசியுள்ளார். இந்த தகவல் முழுவதும் அப்படியே மாதவன் போலீசாரிடம் ஒப்படைக்க, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாதவன் சொன்ன விஷயங்களை உறுதி செய்ய பெரி செந்திலின் மகன் மணிகண்ட சந்துருவை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.
ஆனால் அவர், தந்தை பெரி செந்திலும், சித்தப்பா ராஜீவ் காந்தியும் தலைமறைவாகிவிட்டனர் என்று தெரிவித்தார். எனவே தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தேனியில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் ராஜீவ் காந்தி மட்டும் இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார். இதற்கு முன்னர் கடந்த 2015 மற்றும் 2018ம் ஆண்டு நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் போலி என்பது போலீஸ் விசாரணையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பாஜகவின் மாநில தலைமை மற்றும் தேசிய தலைமை மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளர் தன் வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications