வணங்கும் பக்தர்களுக்கு வளங்களை அள்ளித்தரும் அட்சயபுரீஸ்வரர்
சென்னை: அட்சய திருதியை நாளில், பக்தர்கள் வணங்க வேண்டிய தலம் சோழ தேசத்தில் உள்ள அட்சயபுரீஸ்வரர் ஆலயமாகும். புராணப் பெருமைகள் கொண்ட இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீஅபிவிருத்தி நாயகி.
முதலாம் மாறவர்ம பராக்கிரம பாண்டிய மன்னன் இவரை வழிபட்டதாகச் சொல்கிறது தல வரலாறு. தவிர, கோயிலுக்கு உட்பட்ட நிலங்கள் அனைத்துக்கும் வரிவிலக்கு அளித்துள்ளார் மன்னன்.

னிபகவான் தனக்கு ஏற்பட்ட சாபத்தால், விளா மரங்கள் கொண்ட வனப்பகுதிக்கு வந்தார். அப்போது கால் இடறியது. அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கிருந்து ஊற்றெனக் கிளம்பிய 'பூச ஞான வாவி' எனும் தீர்த்தத்தால் சாபம் நீங்கப் பெற்றார். அந்தத் தலமே, விளங்குளம் என்கிறது ஸ்தல புராணம்.
சனி பகவானுக்கு சாப விமோசனம் அளித்த சிவனார், 'மந்தா, ஜேஷ்டா எனும் இருவரை மணந்துகொண்டு, இங்கு தம்பதி சமேதராகக் காட்சி தருவாய்' என அருளினார். அதன்படியே சனீஸ்வர பகவான் இங்கு திருக்காட்சி தருகிறார்!
அட்சய திருதியை நாளில், மூலவர் சிவனாருக்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்கள் பதித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறகு, சனீஸ்வரருக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பு செய்வித்து, எள், அரிசி, கோதுமை, பாதாம்பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து அலங்கரிப்பார்கள். இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும்.
ஆதி பிருஹத் சனீஸ்வர பகவானின் நட்சத்திரம் பூசம். எனவே, சனிப்பெயர்ச்சி நாள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு சந்தனக்காப்பு செய்து, எள் சாதம், எள்ளுருண்டை, எள் சேர்ந்த தட்டை, முறுக்கு போன்றவற்றை நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கினால், சனிப் பார்வையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
27 நட்சத்திரத்தில் பூச நட்சத்திரம் 8வது நட்சத்திரமாக அமைந்துள்ளது. இதனால் பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் இந்த நாட்களில் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சனைகள் தீரும் என்பதும் நம்பிக்கை.
அனைத்து வகையான சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் மனைவியருடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனிபகவானை வழிபட்டால் தோஷங்களின் பாதிப்பு குறையும் என்பதும் ஐதீகம்.
அடிக்கடி உடல் நலக்குறைவு, கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம்.
இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனி பகவான் தம்பதி சமேதராகக் காட்சி தரும் தலம் என்பதால், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், திருமணத் தடைகளும் தோஷங்களும் விலகும். சந்தோஷம் பெருகும்!
இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்கு பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். விநாயகர் இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது. இவரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் விஜயம் கிடைக்கும் என்பதால் இவர் விஜய விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது விளங்குளம் கிராமம். பட்டுக்கோட்டை, ராமேஸ்வரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், பேராவூரணியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர்.
இங்கே அருளும் பொருளும் அள்ளித் தந்து அருள்பாலிக்கிறார் ஆதி பிருஹத் சனீஸ்வரர். அட்சய திருதியை நாளில், சனீஸ்வரரையும் ஸ்ரீஅட்சய புரீஸ்வரரையும் வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது உறுதி!












Click it and Unblock the Notifications