திமுக என்றால் அது ஸ்டாலின் மட்டுமே.. அழகிரியே நிரூபித்து விட்டார்!
Recommended Video

-ராஜாளி
சென்னை: அண்ணா மறைந்தபோது கருணாநிதி ஒரே வாரத்தில் தனக்கு முன் எழுந்த அத்தனை தடைகளையும் தகர்த்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். அதோடு திமுகவில் இல்லாத தலைவர் பதவியையும் தனக்கென பட்டயம் போட்டுக் கொண்டார். ஐம்பது ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தவர் அந்தப் பதவிக்கான நியாயத்தையும் அழகாகவே செய்து முடித்தார். அதன் விளைவாகவே கட்சி இன்று ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் ஆலமரம் போல் தழைத்து நிற்கிறது.
அதே பாணியில் அவருக்குப் பின் அவரது மகன் ஸ்டாலின் கருணாநிதி மறைந்த சில நாட்களிலேயே கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுவிட்டார். ஆனால் அவருக்கு முன் பல சவால்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு சவால் அவரது குடும்பத்தில் இருந்தே வந்தது. அவரது அண்ணன் மு.க அழகிரி. கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு கருணாநிதியின் மரணம் வரை அமைதியாக இருந்துவிட்டு அதன்பிறகு விஸ்வரூபம் எடுக்க எண்ணினார்.

கட்சியில் தன்னை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். கருணாநிதியின் சமாதியில் சென்று தனது ஆதங்கங்களை கொட்டினார். கட்சிப் பதவி விலைக்கு விற்கப்படுகிறது என்றார், கட்சியின் நிதி முறைகேடாக செலவழிக்கப்படுகிறது என்றெல்லாம் பேட்டி தட்டினார். இதற்கெல்லாம் திலகம் வைப்பது போல கருணாநிதியின் 30 வது நாள் அன்று சென்னையில் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெறும் அப்போது நான் யாரென்று புரியும் என்றெல்லாம் சூளுரைத்தார்.
இந்தப் பின்னணியில் திமுக உடன்பிறப்புகள் மட்டுமல்லாது பொதுமக்கள் வரை அனைவருமே செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள பேரணி என்னென்ன அரசியல் மாற்றங்களை நிகழ்த்துமோ என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஸ்டாலின் கூடாரம் கூட ஒரு திகில் பார்வையோடே பேரணி நாளை எதிர்பார்த்திருந்தது. அதற்கேற்றார் போல அழகிரியும் மதுரையில் அமர்ந்துகொண்டே ஆதரவாளர்களோடு ஆலோசனைக் கூட்டம், திமுக அதிருப்தி நிர்வாகிகளை போன் மூலமாக தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டுதல் என்று கெத்து காட்டி வந்தார்.
இவையெல்லாம் புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கும் ஸ்டாலினுக்கு பெரிய தலைவலியை உருவாக்கும் என்றே அனைவரும் எண்ணினார் ஆனால் அவை அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு ஸ்டாலின்தான் உணமையான திமுக தலைவர் என்பதை அழகிரியே நிருபிக்கும் வேலைகளில் அடுத்தடுத்து இறங்கினார்.
அழகிரியின் சறுக்கல்கள்
தென்மாவட்டங்களில் மட்டுமே தனக்கு பலம் உண்டு சென்னையில் தன்னால் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற பிம்பத்தை உடைக்கவும் தனது பின்னால் திமுக தொண்டர்கள் இவ்வளவு பேர் உள்ளனர் என்பதை நிருபிக்கவுமே அழகிரி அமைதிப் பேரணி என்ற பெயரில் தனது படை பலத்தை காண்பிக்க நினைத்தார். ஆனால் பேரணி நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே சறுக்க ஆரம்பித்துவிட்டார் அழகிரி. கடந்த சில ஆண்டுகளாக, 'எனது ஒரே தலைவர் கலைஞர்தான்’ என கூறிவந்தவர் இப்போது ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் என்றார்.
திமுகவில் தன்னை சேர்க்க இப்படியும் ஒரு அஸ்திரத்தை வீசிப் பார்த்தார். அழகிரி என்றாலே அஞ்சா நெஞ்சர் என்று அப்படி இருந்த அழகிரி இப்போது இப்படி மாறியும் தன்னை திமுகவில் இணைக்க வேண்டும் கோரிக்கை விடுத்தபோதே அவரது அஞ்சா நெஞ்சன் என்ற பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்க தொடங்கியது. அடுத்ததாக திமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டாலே போதும் எந்தவித பதவிகளும் வேண்டாம் என்றும் கூறிப் பார்த்தார். ம்ஹூம் எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
சொதப்பிய பேரணி
குறைந்தது 1 லட்சம் பேர் செப்டம்பர் 5-ம் தேதி பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று தொடர்ந்து பில்டப் ஏற்றிவந்தார். அத்தனை சாலைகளும் ரோமை நோக்கி என்பது போல செப்டம்பர் 5-ம் தேதி நடக்க உள்ள பேரணி எப்படி இருக்கும் என்பதையே திமுகவினரும் ஊடவியலாளர்களும் எதிர்நோக்கி காத்திருந்தனர். பேரணி நடந்த அன்று தமிழக அரசு கூட தனது நிகழ்ச்சிகளை சற்று நேரம் ஒத்திவைத்தது. இந்த நிலையில் 4 –ம் தேதி சென்னைக்கு விமானம் மூலம் வந்திறங்கினார் அழகிரி. அவரை வரவேற்க திமுக நிர்வாகி ரவி என்பவர் சென்றார். இந்த தகவல் அறிந்ததுமே திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மூலம் ரவியை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ததாக அறிவிக்கிறது திமுக தலைமை. ஸ்டாலினின் புத்திசாலித்தனமான காய் நகர்த்தல் இதில் அழகாக வெளிப்பட்டது. அழகிரியை வரவேற்க சென்றதற்கே இந்த நடவடிக்கை என்றால் பேரணியில் கலந்துகொண்டால் என்னவாகும் என்பதை திமுக உடன்பிறப்புகளுக்கு அழகாக உணர்த்தி விட்டார்.

இப்படிப்பட்ட நிலைமையில் திட்டமிட்டபடி சென்னையில் பேரணி தொடங்கியது. அழகிரி கூறியபடி பேரணியில் ஒருலட்சம் பேர் இல்லை குறைந்த பட்சம் 50 ஆயிரம்பேர் கூட இல்லை. மாறாக கூடிய எண்ணிக்கை வெறுமனே 10 ஆயிரத்திற்குள்தான் என்பது பேரணியை பார்த்தவர்கள் அனைவருக்குமே புரிந்திருக்கும். இந்த எண்ணிக்கை கூட திமுக தொண்டர்கள் இல்லை என்பதுவும் அதில் அதிமுகவினரும் இருந்தார்கள் என்பதுவும் வேறு கதை. சரி பேரணிதான் இப்படி நடந்தது என்றால் பேரணிக்குப் பிறகு அழகிரி கூறியபடி தனது அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்து ஓ பி எஸ் பாணியில் தர்மவார் தொடங்கி அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்தால், ஒன்றுமே இல்லை பேரணி மிகப்பெரிய வெற்றி, ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர் இவர்கள் அனைவரையும் இப்போது திமுகவில் இருந்து நீக்குவார்களா என்று கிச்சு கிச்சு மூட்டினார்.

இப்படியாக தனது தொடர்ந்த சறுக்கல்கள் மூலமாக திமுகவின் பொருத்தமான தலைமை ஸ்டாலின்தான் என்பதை அழகிரியே நிருபித்துவிட்டார். பேரணியை நடத்துவதற்கு முன்னர் அழகிரி கொஞ்சம் யோசித்திருக்கலாம். திமுகவில் தன்னை ஒரு சாதாரண தொண்டராக சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கோருவதன் மூலமாக திமுக மூத்த தலைவர்கள் தனக்காக பேசுவார்கள் என்று எதிர்பார்த்தார் அதுவும் நடக்கவில்லை, அடுத்த அதிரடியாக பேரணி மூலமாக தனது ஆள் பலத்தை காட்டி திமுக தலைமைக்கு ஒரு பெரிய நெருக்கடி கொடுக்கலாம் என்று எண்ணினார் அதுவும் புஷ்வாணமாகி விட்டது, பேரணிக்கு கூடும் கூட்டம் மூலம் காங்கிரசுடனோ, அ ம மு க வுடனோ, பாஜகவுடனோ கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்த்தார் இறுதியில் அதற்கும் வாய்ப்பில்லை என்று அழகிரியே நிருபித்து விட்டார்












Click it and Unblock the Notifications