ஜல்லிக்கட்டு.. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை நேரில் அழைக்க அலங்காநல்லூர் குழு கிளம்பியது
ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்க வருமாறு கூறி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்க அலங்காநல்லூர் விழாக் கமிட்டியினர் சென்னை வருகின்றனர்.
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க வருமாறு கோரி முதல்வர் .ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோருக்கு நேரில் அழைப்பு விடுக்க அலங்காநல்லூர் விழாக் கமிட்டி சார்பில் ஒரு குழு சென்னைக்கு கிளம்பியுள்ளது.
தனியாக ஒரு மினி பஸ் அமர்த்தி அதில் 20 பேர் கொண்ட குழுவினர் சென்னை கிளம்பிச் சென்றுள்ளனர். ஜல்லிக்கட்டு விழாக் குழுத் தலைவர் சுந்தர் தலைமையில் இவர்கள் செல்கிறார்கள்.
முன்னதாக பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென தள்ளி வைத்து விட்டனர். தள்ளி வைத்த கையோடு அலங்காநல்லூர் கமிட்டியினர் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். அங்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்தனர். இந்த நிலையில் தற்போது விழாக் கமிட்டியினர் அழைப்பிதழோடு சென்னைக்குக் கிளம்பியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்க வருமாறு முதல்வரையும் சசிகலாவையும் இவர்கள் அழைக்கவுள்ளனர். இதில் யார் போட்டியைத் தொடங்கி வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முதல்வரா அல்லது சசிகலாவா என்பது பெரும் குழப்பமாக உள்ளது.
முதல்வர் தொடங்கி வைப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. அவசரச் சட்டம் தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து அதைக் கொண்டு வர பாடுபட்டவர் என்ற அடிப்படையில் அவர் தொடங்கி வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சசிகலா தொடங்கி வைப்பதாக இருந்தால் என்ன தகுதியின் அடிப்படையில் அவர் தொடங்கி வைக்க முடியும் என்பது இந்த ஜல்லிக்கட்டுக்காக உயிரைக் கொடுத்து இரவும் பகலுமாக போராடி, கடைசியில் போலீஸாரின் தடியடிகளுக்கும் இரையாகிய அப்பாவி மாணவர்கள், இளைஞர்களின் கேள்வியாக உள்ளது.