நிரப்பியதும் தீரும் பணம்.. சென்னையில் 11வது நாளாக ஏடிஎம்கள் முடக்கம்.. மக்கள் அவதி
சென்னையில் பணம் நிரம்பிய சில நிமிடங்களிலேயே தீர்ந்து விடுவதால் 11-வது நாளாக இன்றும் பல ஏ.டி.எம்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.
சென்னை: இம்மாதம் 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி, அறிவித்தது முதல் பணம் வைத்த சில நிமிட நேரங்களிலேயே ஏடிஎம்களில் தீர்ந்துவிடுவதால் சென்னையில் 11-வது நாளாக இன்றும் அவை முடங்கியுள்ளன.
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி அதிரடியாக அறிவித்தார். அன்று இரவு 12 மணி முதல் அந்த அறிவிப்பு அமலுக்கு வந்தது. இதையடுத்து 9, 10- ந் தேதிகளில் ஏ.டி.எம்கள் அடியோடு முடக்கப்பட்டன.

சில நாட்கள் கழித்து தான் ரூ.2000 நோட்டுகள் ரூ.100 நோட்டுகள் ஏ.டி.எம் எந்திரங்களில் வைக்கப்பட்டன. சில வங்கிகளில் ஏ.டி.எம்.களில் ரூ.100 நோட்டுகளும், சில வங்கி ஏ.டி. எம்களில் ரூ.2000 நோட்டுகளும் கிடைத்தன.
வங்கி ஏ.டி.எம்களில் அதிக அளவு ரூ100 நோட்டுகளை வைக்க முடியாததால் சிறிது நேரத்திலேயே பணம் தீர்ந்து விடுகிறது. அடுத்து எப்போது பணம் நிரப்பப்படும் என்பது தெரியாமல் மக்கள் காத்துகிடக்கிறார்கள்.
ஒருவர் பல வங்கிகளின் ஏ.டி.எம் கார்டுகள் வைத்திருக்கிறார். அவர் அதைப் பயன்படுத்தி அவரது கார்டுகள், குடும்பத்தினர் கார்டுகள், உறவினரது கார்டுகள் என மாறி மாறி பணத்தை எடுத்து விடுகிறார்.
இதனால் மற்றவர்கள் பணம் எடுக்க முடியாமல் போய் விடுகிறது. இதை ஏ.டி.எம். காவலாளிகளோ, வங்கி ஊழியர்களோ கண்டு கொள்ளவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதன் காரணமாகவும் ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு முடக்கப்பட்டு விடுகிறது.
சென்னையில்,11-வது நாளாக இன்றும் பல ஏ.டி.எம்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.
இதனிடையே மைக்ரோ ஏடிஎம்கள் மூலம் புறநகரப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளையொட்டிய இடங்களிலும் பணப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று இந்திய வங்கிகள் கூட்டமைப்புத் தலைவர் ராஜீவ் ரிஷி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
500,1000 ரூபாய் நோட்டுக்கள் மூத்தக் குடிமக்களுக்கு மட்டுமே மாற்றித் தரப்படும் என்று முடிவு இன்று மட்டுமே பொருந்தும் என்றும் வரும் வேலை நாட்களில் அனைத்து தரப்பினருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்கள் வழக்கம் போல் மாற்றித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.
ரூபாய் நோட்டுக்களை திரும்பத் திரும்ப வந்து மாற்றுபவர்களை கண்காணிப்பதற்காக வலது கை விரலில் மை வைத்த நடைமுறைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, வங்கிகளில் மக்கள் கூட்டம் குறைந்து வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரிஷி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications