ஐ.பி.எல்.பிக்ஸிங்: சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட தடை- சுப்ரீம் கோர்ட் பரிந்துரை!!
டெல்லி: பிக்ஸிங் குற்றச்சாட்டுகளுக்குள்ளாக்கியிருக்கும் சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் கூடாது, சீனிவாசனுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய இடைக்கால தலைவரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அதிரடி பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐ.பி.எல்.6வது போட்டியின் போது பிக்ஸிங் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை நீதிபதி முத்கல் கமிட்டி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது பிக்ஸிங்கில் ஈடுபட்டது உள்ளிட்ட பல புகார்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் நேர்மையான விசாரணை நடைபெற கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் கண்டிப்புடன் கூறியிருந்தது. அத்துடன் சீனிவாசன் விலகாவிட்டால் அவர் பதவி விலக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.
ஆனால் சீனிவாசனோ, என்னை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து யாரும் நிர்பந்தப்படுத்தி வெளியேற்றிவிட முடியாது என்று சவால்விட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
அப்போது முத்கல் கமிட்டி பரிந்துரைப்படி தவறிழைத்தோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தயராக இருக்கிறோம் என்றும் சீனிவாசன் தலைவர் பதவியில் "ஒதுங்கி" இருப்பார் என்றும் உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், கிரிக்கெட்டின் நலன் கருத்தி கடினமான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.
டோணி மீது புகார்
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, முத்கல் கமிட்டியிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அதிரடி பரிந்துரைகள்
பின்னர் உச்சநீதிமன்றம் சில அதிரடியான யோசனைகளைத் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் பதிலைக் கோரியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரைகள்:
- இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக சுனில் கவாஸ்கர் அல்லது மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவரை நியமிப்பது
- என். சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையோர் எவருமே இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது
- ஐ.பி.எல். பிக்ஸிங் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மறு உத்தரவு வரும் வரை நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் கூடாது
இந்த பரிந்துரைகளுக்கான பதிலை கிரிக்கெட் வாரியம் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. கிரிக்கெட் வாரியத்தின் நாளைய பதிலைத் தொடர்ந்து ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க இருக்கிறது.












Click it and Unblock the Notifications