போராட்டம் நடத்திய 126 வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் நிறுத்தி வைப்பு- பார் கவுன்சில்
சென்னை: சென்னையில் போராட்டம் நடத்திய 126 வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
வழக்கறிஞர் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து 126 வழக்கறிஞர்களை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், அகில இந்திய பார் கவுன்சில் தலைவர், 126 வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட்டை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். மேலும் வழக்கறிஞர்கள் வரும் 22ம் தேதிக்குள் நீதிமன்றத்திற்கு வருகின்றனரா என்று கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என்றும் தமிழக பார் கவுன்சில் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் உத்தரவை அகில இந்திய பார் கவுன்சில் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.