திமுக- தேமுதிக கூட்டணி தான் தமிழகத்தை காப்பாற்றும்: கருணாநிதி
சென்னை: இப்போது உள்ள சூழ்நிலையில் கூட்டணியின் வெற்றி தான் தமிழகத்தைக் காப்பாற்றும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை உள்ளிட்ட 5 முக்கிய பிரச்சினைகளைப் பற்றி ஆலோசிப்பதற்காக நேற்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் தலைமையில் பிரதமர் மோடியைச் சந்திக்கும் குழுவில் திமுக பிரதிநிதிகளாக கனிமொழியும், திருச்சி சிவாவும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் கருணாநிதி. அப்போது, ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் உங்களைச் சந்தித்ததை, கூட்டணிக்கான ஒரு அச்சாரமாக எடுத்துக் கொள்ளலாமா?' என்ற செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குக் கருணாநிதி, ‘அது ஒவ்வொருவரும் தங்களுக்குள் எடுத்துக் கொள்வதைப் பொறுத்தது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இப்போதே அதுபற்றி முன் கூட்டியே எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் இப்போது தமிழ்நாடு உள்ள நிலையில் கூட்டணி தேவை என்பதையும், அந்தக் கூட்டணியின் வெற்றி ஒன்று தான் தமிழ்நாட்டைக் காப்பாற்றும் என்பதையும் தான் நான் எடுத்துக் கூற விரும்புகிறேன்' என்றார்.
அதனைத் தொடர்ந்து, ‘விஜயகாந்த் எடுத்த முயற்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு, ‘ஜனநாயகத்தில் தமிழ்நாட்டு மக்களை ஒன்று திரட்டுகின்ற முயற்சியை தம்பி விஜயகாந்த் எடுத்துக் கொண்டதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அப்படிப் பாராட்டுவதற்கு அடையாளமாகத் தான் திராவிட முன்னேற்றக் கழகமும் அவருடைய முயற்சிக்கு எல்லாவகையான ஆதரவையும் தரத் தயாராக இருக்கிறது என்பதைச் சொல்ல விரும்புகிறேன்' என கருணாநிதி பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications