எதிர்கட்சிகளுக்கு சவுக்கடி கொடுங்கள்: ஸ்ரீரங்கம் வாக்காளர்களிடம் சொன்ன சரத்குமார்
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் இருக்கவேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. கடந்த 7ஆம் தேதி முதல் பிரசாரம் செய்து வருகிறார் .
நேற்று காலையில் வயலூர் சாலை ரெட்டை வாய்க்கால் என்ற இடத்தில் பேசிய அவர், ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக 3 ஆயிரத்து 213 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து உள்ளதாக தெரிவித்தார்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டு
நகரங்களை விட அதிக கிராமங்களை கொண்ட இந்த தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான சாலைகள், மின் விளக்குகள் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. மக்களின் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் அனைத்து துறைகளையும் வளர்ச்சி அடைய செய்து அகில இந்திய அளவில் தமிழகத்தை முன்னேற்ற பாதையை நோக்கி கொண்டு சென்றார். அப்படிப்பட்ட நேரத்தில் தான் இந்த இடைத்தேர்தல் வந்து உள்ளது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீது எதிர்கட்சியினர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் சரத்குமார் தெரிவித்தார்.

ஸ்டாலின் கனவு
புதுக்கோட்டை இடைத்தேர்தல், மாநகராட்சி இடைத்தேர்தலில் எல்லாம் போட்டியிடாமல் ஓடி ஒளிந்து கொண்ட தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் முதல்வர் ஆவேன் என்கிறார்.

கனவு நிறைவேறுமா?
அவர் எந்த மாநிலத்திற்கு முதல்வர் ஆக போகிறார் என தெரியவில்லை. அவரது கனவு பலிக்காது. சினிமாவில் வரும் கனவு காட்சியை விட அதிகமாக அவர் கனவு காண்கிறார். அந்த கனவு பலிக்குமா தெரியவில்லை.

எதிர்க்கட்சிகளுக்கு சவுக்கடி
கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்த தொகுதியில் நடந்து உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை பார்த்துக்கொண்டு இருக்கும் வாக்காளர்கள் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை வெற்றி பெற செய்யவேண்டும் என முடிவு செய்து விட்டார்கள்.

டெல்லி முடிவு தெரியுமா?
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்ன பேசுவது என தெரியாமல் ஏதேதோ பேசி வருகிறார். அவரது கட்சிக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள முடிவை பார்த்தீர்களா? ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு சவுக்கடி கொடுப்பது போல் இருக்கவேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் அமையவேண்டும் என்றார் சரத்குமார்

ஜே.கே.ரித்தீஷ்
தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்றே கடைசிநாள் என்பதால் அதிகாலையிலேயே அதிமுகவினர் சுறுசுறுப்பாக வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர். விளையாட்டுத்துறை அமைச்சர் சுந்தரராஜன், நடிகர் ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் வீதி வீதியாக சென்று அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

காலியாகும் கூடாரம்
நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் தொகுதியல்ல நபர்கள் இன்று மாலை 5 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதால் நகரின் முக்கிய பகுதிகளில் தங்கியிருக்கும் வெளியூர் நபர்கள் தங்களின் கூடாரங்களை காலி செய்யத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications