தேமுதிக கூட்டணி.. மீண்டும் வரிந்துகட்டும் பாஜக- மீண்டும் வருகிறார் ஜவடேகர்
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க காங்கிரஸ் முயற்சிப்பதைத் தடுக்க பாஜக மீண்டும் களமிறங்கியுள்ளது. அத்துடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க மத்திய அமைச்சர் ஜவடேகர் இந்த வாரம் தமிழகம் வருகை தர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக தனித்துப் போட்டி என அறிவித்ததால் திமுகவுடன் உறுதியாக கூட்டணி அமைக்காது என நம்பிக்கையோடு இருந்தது பாரதிய ஜனதா கட்சி. அதே நேரத்தில் விஜயகாந்த் தலைமையில்தான் கூட்டணி என அறிவித்ததற்கும் பதிலடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரே கேப்டன் பிரதமர் மோடி மட்டுமே என்றும் கூறியது பாஜக.

அது போனவாரம்
இப்படி அறிவித்து தேமுதிகவை கழற்றிவிட்ட கையோடு, சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை பாஜக மேற்கொண்டு வந்தது. மேலும் தேமுதிகவுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.

இது இந்த வாரம்...
இந்த நிலையில் தேமுதிகவை திமுக கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் முழுவீச்சில் களமிறங்கியிருப்பதாகவும் விஜயகாந்தும் இறங்கி வரப் போவதாகவும் செய்திகள் வெளியானது...
அவ்வளவுதான்... இப்போது மீண்டும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை என்ற அஸ்திரத்தை வீசத் தொடங்கியிருக்கிறது பாஜக.

அதிமுகவுக்காக...
திமுக கூட்டணிக்கு தேமுதிக போனாலும் போகட்டும் பாஜகவுக்கும் ஒன்றும் பெரிய லாபமோ, நட்டமோ இல்லை. ஆனால் அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அதிமுகவுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்படும் என்பதுதான் யதார்த்த நிலைமை. இந் நிலையில் திமுக பக்கம் தேமுதிக போய்விடாமல் தடுக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது

தேறாத பேச்சுவார்த்தை
தேமுதிக நிர்வாகிகளோ 2% வாக்கு வங்கி இருக்கும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஜெயலலிதாவின் வெற்றிக்கு உதவியதாகிவிடும்; திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஜெயலலிதாவை வீழ்த்துவதுடன் கணிசமான இடங்களைப் பெற முடியும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இதனால் இம்மியளவும் தேமுதிகவுடனான பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை.

மீண்டும் பேசுவோம்- தமிழிசை
அதே நேரத்தில் தமிழகத்தில் அதிமுகவுக்கு உதவி செய்தால் ராஜ்யசபாவில் அக்கட்சியின் ஆதரவு தாராளமாக கிடைக்கும் என்பது பாஜகவின் நம்பிக்கை. இந் நிலையில் தான் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பிரகாஷ் ஜவடேகர் மிகவும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே எங்களுடன் இருந்த கட்சிகளே இந்த தேர்தலையும் இணைந்து சந்திக்க முயற்சிகள் எடுக்கப்படும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இதற்கான விடை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. தே.மு.தி.கவுடன் கூட்டணி வாய்ப்பு இல்லை என்று இப்போது என்னால் மறுக்க முடியாது எனக் கூறியிருக்கிறார்.

அந்தர் பல்டி
இத்தனைக்கும் நேற்றுதான், பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பா.ஜ.க. கூட்டணியில் சேர விரும்பவில்லை. விருப்பம் இல்லாதவர்களுடன் கூட்டணி வைக்க பா.ஜ.கவும் விரும்பவில்லை. கட்டாயப்படுத்தி கூட்டணி சேர வேண்டிய அவசியம் பா.ஜ.கவுக்கு இல்லை என கூறியிருந்தார் தமிழிசை. இப்படி சொல்லிவிட்டு மறுநாளே, லோக்சபா தேர்தலில் எங்களுடன் இருந்த கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க முயற்சிப்போம் என அந்தர் பல்டி அடித்திருக்கிறார் தமிழிசை.

மீண்டும் ஜவடேகர்
இதனிடையே விஜயகாந்த்தை மீண்டும் சந்தித்து பேச மத்திய அமைச்சரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் சென்னை வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜயகாந்துடன் ஏற்கனவே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் ஜவடேகர்; ஆனால் அதை ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என மறுத்தது தேமுதிக. இப்படி அவமானப்படுத்தப்பட்ட பின்னரும் விஜயகாந்த்தை மீண்டும் ஜவடேகர் சந்திக்க வர உள்ளாராம்.தேமுதிக விவகாரத்தில் வெல்லப் போவது காங்கிரஸா? பாஜகவா?












Click it and Unblock the Notifications