ஒரு காசு கூட கொடுக்காமல் நான் பெற்ற 20,000 ஓட்டுக்களுக்கும் நன்றி.. ஆளூர் ஷாநவாஸ்
சென்னை: ஒரு ரூபாய் கூட வாக்காளர்களுக்குக் கொடுக்காத எனக்கு 20,000 பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். அதற்காக நான் ஆறுதல் அடைகிறேன், நம்பிக்கையும் பெறுகிறேன் என்று குன்னம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார் வி்டுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஷாநவாஸ். இத்தொகுதிக்குட்பட்ட அங்கனூர்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சொந்த ஊர் என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் படு தீவிரமாக வேலை பார்த்தனர், பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும் ஷாநவாஸ் தோல்வியைத் தழுவியுள்ளார்.

இதுதொடர்பாக ஷாநவாஸ் தனது பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது:
வலிமை பெற்றவர்களுக்கும் வலிமையற்றவர்களுக்குமான போட்டியில், எளியவன் என்னையும் ஏற்றுக்கொண்டு சுமார் 20,000 பேர் வாக்களித்துள்ளனர். பணம் புரளும் சந்தையாக மாறிப்போயிருக்கும் தேர்தல் களத்தில், வாக்காளர்களுக்கு ஒரே ஒரு ரூபாய் கூட கொடுக்காத எனக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளது, பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது.
சட்டப்பேரவையில் என் குரல் ஒலிக்க வேண்டும் என விரும்பி, வாக்களித்தவர்கள் - வாழ்த்தியவர்கள் - பிரார்த்தித்தவர்கள் - உடனிருந்து உழைத்தவர்கள் - பொருள் தந்து உதவியவர்கள் - ஆதரித்தவர்கள் - அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். மக்கள் மன்றத்தில் எப்போதும்போல் என் குரல் ஒலிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications