அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு
நெல்லை: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதிகளின் பற்கள் பிடுங்கியது தொடர்பான வழக்கில் உயர்மட்ட விசாரணை கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் மனு மீதான விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை மாநிலத்தை சேர்ந்த தமிழக ஐபிஎஸ் கேடரான இவர், அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குபட்ட பகுதிகளில் சிறுசிறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பற்களை பிடுங்கியதாக பாதிக்கப்பட்ட பலரும் பல்வீர் சிங்கிற்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த விவகாரம் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர்கள் வீடியோக்கள் வெளியிட்டு தங்களுக்கு நேர்ந்த சித்ரவதையை வெளியிட்டனர். இதையடுத்து பல்வீர் சிங்கிற்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து பல்வீர் சிங் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய பல்வீர் சிங் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் ராஜ்குமார், போகபூமன், சந்திரசேகரன், ராஜகுமாரி, பெருமாள், சக்தி நடராஜன், சந்தானகுமார், மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உயர்மட்ட விசாரணை அதிகாரியாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டார். அவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. எனினும், இதுவரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்று வருகிறது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உயர் மட்ட விசாரணைக்குழு அறிக்கையை மனுதாரருக்கு தருவது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அருண் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications