ஓபிஎஸ் - எடப்பாடி இணையவேண்டும்..? அமித்ஷா சொன்ன வார்த்தை.. டக்கென திரும்பி பார்க்கும் அதிமுக தலைகள்!
சென்னை : அதிமுக விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து சுமூக முடிவை எடுக்க வேண்டும், அது என்னைச் சார்ந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார் அமித் ஷா.
தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததையடுத்து எடப்பாடி தரப்பின் கை ஓங்கியுள்ளது. அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி, அமித் ஷாவை சந்தித்து ஆலோசித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த ஆலோசனையில் பங்கேற்றிருந்தார். இந்தச் சந்திப்பின்போது 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

முன்னதாக, பாஜக - அதிமுக இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்தன. தேர்தலில் கூட்டணியில் அதிமுக இருந்தால் பாஜக மாநிலத் தலைவர் பதவியையே ராஜினாமா செய்வேன் என்ற அளவுக்கு கொந்தளித்தார் அண்ணாமலை. திமுகவின் சொத்துப் பட்டியலை வெளியிட்டது போலவே அதிமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் எனக் கூறினார் அண்ணாமலை.
பாஜக - அதிமுக மோதல் : அண்ணாமலையின் பேச்சுகளுக்கு அதிமுகவினரும் பதிலடி கொடுத்து வந்ததால் மோதல் நீடித்தது. பாஜக நிர்வாகிகளும், அதிமுகவினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். கூட்டணி உடைவது கிட்டத்தட்ட உறுதி என்கிற அளவுக்கு சமூகவலைதளங்களில் கருத்துகள் வந்த நிலையில் அதிமுக - பாஜகவுக்கு இடையேயான கருத்து மோதல்களும் அனல் பறந்தன.

இந்நிலையில் தான் டெல்லி சென்று அமித் ஷா, நட்டா ஆகியோரோடு ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. இந்த மீட்டிங்கின்போது அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி இடையே அமித் ஷா சமரசம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த மீட்டிங்கிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஈபிஎஸ், அண்ணாமலையுடன் எந்தத் தகராறும் இல்லை என்றார்.
அமித் ஷா மீட்டிங் : பாஜக தலைமை எடப்பாடி தரப்புடன் மட்டும் கூட்டணி பற்றியும், சீட் பகிர்வு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியது ஓபிஎஸ் தரப்பை கடுமையாக அப்செட்டாக்கியது. ஏற்கனவே, பாஜகவின் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டி பாஜகவை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அமித் ஷா ஈபிஎஸ்ஸை சந்தித்து ஆலோசித்தது ஓபிஎஸ் தரப்பிற்கு அதிர்ச்சி கிடைத்தது.
இதனால், பாஜக தலைமை எடப்பாடி பழனிசாமிக்கே அங்கீகாரம் அளித்துவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. ஓபிஎஸ் பாஜகவை பெரிதும் நம்பிய நிலையில் அவரைக் கைவிட்டுவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. மக்கள் மன்றத்தை நாட ஓபிஎஸ் திட்டமிட்டு வரும் நிலையில், பாஜக தலைமையுடன் ஓபிஎஸ் தரப்பு பேசி வருவதாக கூறப்படுகிறது.

அமித் ஷா பேட்டி : அதேசமயம், டெல்லியில் நடந்த சந்திப்பின்போது, ஓபிஎஸ், தினகரனுடன் இணைந்து செயல்படுவது பற்றியும் அமித் ஷா எடப்பாடி பழனிசாமியிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், ஓபிஎஸ் தேவையில்லை, அங்கிருந்து பலரும் தம் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்து விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி தனியார் ஊடகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள பேட்டியில், அதிமுக விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்றும் சுமூக முடிவை இருவரும் பேசி எடுக்க வேண்டுமா வேண்டாமா என்பது என்னைச் சார்ந்தது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications