இலவச மின் விசிறி விலை ரூ.70! ஆட்சி முடியும் முன்பு இலவசங்களின் ஆயுளும் முடிந்தது
நெல்லை: நெல்லை அருகே அரசின் இலவச மின்விசிறி ரூ.70க்கு பழைய இரும்பு கடைக்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.
தமிழக அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை பெரும்பாலான வீடுகளில் செயல்படாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது. இலவசம் என்ற பெயரில் தரமில்லாத பொருட்களை வழங்கியதால் தினந்தோறும் பொதுமக்களை அவற்றை எடுத்து கொண்டு சர்வீஸ் சென்டருக்கு நடையாய் நடந்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை பகுதியில் பல இடங்களில் இலவச மின்விசிறி பழுதடைந்ததால் அவற்றை பழைய இரும்பு கடையில் ரூ.70-க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை தள்ளு வண்டியில் வைத்து வியாபாரி கொண்டு செல்வதை பார்த்த பொதுமக்கள் ஆட்சி முடிவதற்குள் அவர்கள் கொடுத்த இலவசங்களின் ஆயுளும் முடிந்து விட்டது என வேதனையுடன் புலம்பி சென்றனர்.
தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. பல இடங்களில் கிரைண்டர் கல் உடைந்து போய் இருக்கிறது. மிக்சியை பொறுத்தவரை பிளேடு, மோட்டார் பிரச்சனைதான் அதிகமாக இருக்கிறது. இதை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தாமல் உள்ளதால் அது அனைத்து வீடுகளிலும் அப்படியே பரண் மேல் போட்டு வைக்கப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணம் அனைத்தும் வீண் என பலரும் புலம்பி வருகின்றனர்.