அம்மா கடனுதவி கிடைக்கலையே... தெருவோர வியாபாரிகள் ஏமாற்றம்
சென்னை: அம்மா சிறு வணிக கடன் உதவி திட்டத்தின் கீழ் 30ம் தேதி வரை நடைபெற்ற முகாம்களின் மூலம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 535 பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 30 ஆயிரத்து 597 பேருக்கு ரூ.15 கோடியே 30 லட்சம் அளவுக்குசிறுவணிக கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சியில் உரிமம் இல்லாத வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படாது' என, அதிகாரிகள் கூறியதால், ஏராளமான வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, கடலூர் உட்பட 6 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பலரது வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக பூ, பழம், காய்கறிகள் விற்பனை செய்து வந்த சிறு வியாபாரிகள், பெட்டிக்கடை நடத்துவோர், தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றோர் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர்.
இவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோனதால் வாழ்வுக்காக மிகவும் தவித்த நிலையில் இருந்தனர். மேலும் மீண்டும் இவர்கள் தங்களின் வியாபாரத்தைத் தொடங்குவதற்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழ்நிலை எழுந்தது.
இவர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, இதுபோன்ற சிறு வணிகர்களுக்காக அம்மா சிறுவணிகக் கடன் வழங்கும் திட்டத்தை அறித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சிறு வணிகர்கள், பெட்டிக் கடை நடத்துவோருக்கு, 'கூட்டுறவு வங்கிகள் மூலம், 5,000 ரூபாய் வரை, வட்டியில்லா கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டியாக, 11 சதவீதத்தை தமிழக அரசு வழங்கும். இந்த கடனை, வாரந்தோறும், 200 ரூபாய் என்ற அடிப்படையில், 25 வாரங்களில், வியாபாரிகள் திருப்பி செலுத்த வேண்டும். குறித்த காலத்தில், கடனை திரும்ப செலுத்துவோருக்கு, மீண்டும் அதே அளவு கடன் தொகை, குறைந்த வட்டியான, 4 சதவீதத்தில் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா, தெரிவித்தார்.
கடன் வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா, ஜனவரி 22ல் துவக்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி மூலம், ஜனவரி 22 முதல், பிப்ரவரி 2 வரை சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும், 1,542 இடங்களில், முகாம் நடத்தப்பட்டுள்ளது.
அந்த முகாம்களை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஒருங்கிணைத்து நடத்தினார். ரூ.5000 தொகை கடனாக வழங்கப்படுகிறது. 25 வாரங்களில் வாரத்துக்கு தலா ரூ.200 என்ற வீதத்தில் கடனை திரும்பச் செலுத்தலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 30-ந் தேதி வரை 3 ஆயிரத்து 821 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களின் மூலம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 535 பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் 30 ஆயிரத்து 597 பேருக்கு ரூ.15 கோடியே 30 லட்சம் அளவுக்குசிறுவணிக கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மாநகராட்சியில் உரிமம் பெற்றுள்ள வியாபாரிகளுக்கு மட்டும், விண்ணப்பம் வழங்கப்படுகிறது. உரிமம் பெறாமல், தெருவோரங்களில் கடை வைத்துள்ளோர். நடைபாதை வியாபாரிகள், முகாமிற்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
இது குறித்து, கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறியதாவது:சிறு வணிகர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், முகாம் நடத்துகிறோம். மாநகராட்சியில் உரிமம் பெற்று, கடை வைத்துள்ளவர்களுக்கு மட்டும், கடன் வழங்குகிறோம். உரிமம் பெறாதவர்களுக்கு கடன் வழங்கினால், அவர்களை தேடிச் சென்று, பணம் வசூலிப்பது கடினம். எனவே, அவர்களுக்கு கடன் வழங்கவில்லை. கடன் கேட்டு, 70 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications