10 ரூபாய் கொடுத்து அம்மா குடிநீர் பாட்டில் வாங்கிய ஜெ.!
சென்னை: சென்னையில் நேற்று அம்மா குடிநீர் திட்டத்தைத் தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ரூ. 10 பணம் கொடுத்து ஒரு அம்மா குடிநீர் வாட்டர் பாட்டிலை வாங்கி விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஏழை, எளியவர்களுக்கும், பஸ் போக்குவரத்துப் பயணத்தை மேற்கொள்பவர்களுக்கும் குறைந்த விலையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கான திட்டம்தான் இந்த அம்மா குடிநீர் திட்டம்.
10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிநீர் வாட்டர் பாட்டில்களில் தரப்படுகிறது. இந்தத் திட்டத்தை நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே ரொம்ப சீப் இதுதான்
இந்தியாவிலேயே குறைந்த விலைக்கு நிறைந்த தரத்துடன் விநியோகிக்கப்படும் தண்ணீர் பாட்டில் அம்மா குடிநீர்தான். வேறு எங்குமே இந்த அளவுக்குக் குறைந்த விலையில் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் விற்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேல் காசைக் கொட்டி அழ வேண்டாம்
பஸ் பயணங்களை மேற்கொள்வோர் குறிப்பாக அரசுப் பேருந்துகளில் செல்வோர் தண்ணீருக்காக ஆங்காங்கு பெருமளவில் பணத்தைக் கொட்டி அழ வேண்டியதில்லை. மாறாக, பயண வழியெல்லாம் அம்மாவும் இனி உடன் வரப் போகிறார்.

ரயில்வேயில் 15 ரூபாய்
தற்போது பொது இடங்களில் அந்த பீனா, இந்த பீனா என்ற பெயர்களில் விற்கப்படும் வாட்டர் பாட்டில்களின் விலை குறைந்தது 20 ஆக இருக்கிறது. பல இடங்களில் 25க்கு கூட விற்கின்றனர். ரயில் நிலையங்களில் ஒரு வாட்டர் பாட்டில் விலை ரூ. 15 ஆக உள்ளது.

அம்மா குடிநீர் பத்து ரூபாய்தான்
ஆனால் தமிழக அரசின் அம்மா குடிநீர் மிகவும் மலிவாக இருப்பதோடு சுகாதாரமும் மெயின்டெய்ன் செய்யப்படுவது முக்கியமானது.

காசு கொடுத்து வாட்டர் பாட்டில் வாங்கிய ஜெ
திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா பத்து ரூபாய்த் தாளை போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொடுத்து ஒரு வாட்டர் பாட்டிலை வாங்கி விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

தன் கையால் 7 பேருக்கு கொடுத்தார்
அதன் பின்னர் 7 அரசுப் போக்குவரத்துக் கழக பயணிகளுக்கு தனது கையாலாயே வாட்டர் பாட்டில்களையும் விநியோகித்தார்.












Click it and Unblock the Notifications