ஜெ. விடுதலை: அதிமுகவினர் கட்டுகட்டாக ருபாய் நோட்டுகளை வாரி இறைந்து கொண்டாட்டம்
விழுப்புரம்: பெங்களூர் சிறையில் இருந்து ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாவதை அதிமுகவினர் பண்டிகைப் போல கொண்டாடி வருகின்றனர். விழுப்புரத்தில் ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டாக வாரி இறைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் தொடர்பான செய்தி ஊடகங்களில் பிற்பகல் 12.30 மணிக்கு வெளியானது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
பட்டாசு, லட்டு
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த செய்தி பரவியதும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் சென்னையில் தலைமை அலுவலகத்தில் குவியத் தொடங்கினர்.பிற்பகல் 12.45 மணியளவில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் கூடி சாலையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
போயஸ் கார்டனில்
போயஸ் தோட்டப் பகுதியில் கொட்டும் மழையிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அங்கு நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
பாலபிஷேகம்
ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு பால் பாக்கெட்டுகளை உடைத்து அபிஷேகம் செய்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். லட்டுகள் உள்பட பல்வேறு வகையான இனிப்புகளை கட்சி நிர்வாகிகள் வழங்கிக் கொண்டே இருந்தனர்.
கட்டுக்கட்டாய் பணம்
அனைத்திற்கும் மேலாக விழுப்புரத்தில் அதிமுகவினர் கட்டுக்கட்டாக பணக்கட்டுகளை கொண்டுவந்து உற்சாகத்தோடு பறக்கவிட்டனர். இதை ஏராளமானோர் சேகரித்தனர்.
தீபாவளி வந்திருச்சி
இந்த மகிழ்ச்சி குறித்து கருத்துத் தெரிவித்த கட்சித் தொண்டர்கள், பொது மக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் என்றாலும், எங்களுக்கு இன்னைக்குத்தான் உண்மையான தீபாவளி. எனவே, இதை நாங்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம் எனக் கூறி, பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர்.
களை கட்டும் கொண்டாட்டம்
இன்னும் சிலமணிநேரங்களில் ஜெயலலிதா சென்னை திரும்ப உள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதேபோன்ற கொண்டாட்டங்களில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.