சட்டமன்றத்தேர்தலிலும் அதிமுகவிற்கு வெற்றி தொடரும்: சரத்குமார்
நாகர்கோவில்: தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதிமுகவின் வெற்றி 2016 சட்டமன்றத்தேர்தலிலும் தொடரும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் பேசியதாவது:

''தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது என்று கூறினார். அதன்படி மின்வெட்டை போக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். பழுதாகி கிடந்த மின் மாற்றிகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.
தற்போது ஜூன் 1 ஆம் தேதி முதல் மின்வெட்டே இருக்காது என்று அவர் கூறியுள்ளார். இது பாராட்டதக்கது ஆகும். தமிழகம் மின்மிகை மாநிலமாக உருவாக்கப்படும். தமிழக முதல்வர் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்துள்ள வெற்றி கடந்த 3 ஆண்டுகளில் அரசு செய்த சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இதே வெற்றி தொடரும்.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய வருகைக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். அவரை இங்கு அழைத்திருக்க வேண்டாம். மீனவர்கள் பிரச்னையில் தமிழக முதல்வர் எடுத்த முயற்சியில் பேச்சுவார்த்தை மூலமாக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். தமிழக மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக அ.தி.மு.க. அரசு விளங்கி வருகிறது.
தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஊழல், லஞ்சம் இதற்கெல்லாம் மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 40 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர் கட்சி அந்தஸ்தை பெற்றது.
ஆனால் விஜயகாந்த், அவரது தயவால் தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக கூறி வந்தார். தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது. இதிலிருந்து தே.மு.தி.க. நிலை என்ன என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது" என்றார்












Click it and Unblock the Notifications