6 வருஷமாச்சு "அம்மா" வந்து!
அம்மா உணவகம் இன்று 6-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சென்னை: 6-ம் ஆண்டில் அம்மா உணவகம்...
சுட சுட இட்லி, திக்கான சாம்பார், அருமையான குடிநீர், குறைவான விலை என அனைத்து தரப்பு மக்களையும் திரும்பி பார்க்க வைத்த திட்டம் அம்மா உணவகம்
'ஏழைகளின் பசி தீர்க்கும் மிகச் சிறந்த திட்டம்' என்ற முழக்கத்துடன் உள்ளே நுழைந்தது அம்மா உணவகம் திட்டம்.
அடிதட்டு மக்களின் பசியைப் போக்கவே இந்த மகத்தான திட்டம் என்று சொல்லியே ஜெயலலிதா சென்னையில் துவங்கி வைத்தார். முதல் தினமே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரு அதிர்வையே ஏற்படுத்தியது.
எத்தனயோ கூலி தொழிலாளர்கள் ஒருவேளை மற்றும் அரைவயிறு சாப்பாட்டுடன் காலம் தள்ளிய கூலி தொழிலாளர்களுக்கு அருமருந்தாக அமைந்தது அம்மா உணவகம்.
'பசி' தேசிய மொழி
அவர்கள் மட்டும் இல்லை, வேலை தேடுவோர்கள், மிகக்குறைந்த சம்பளத்திற்கு வேலையில் இருப்போர், ஆட்டோ ஓட்டுனர்கள், சீருடை அணிந்த மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் என உழைக்கும் வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளும் ஒன்றுசேர்த்த சங்கமே அம்மா உணவகம். எந்தவித வேறுபாடில்லாமல், பசி மட்டுமே அம்மா உணவகத்தின் தேசிய மொழியாகிபோனது.
அம்மா உணவகம்
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட முதலமைச்சர்கள் தமிழகம் வந்து அம்மா உணவகம் செயல்பாட்டினை நேரில் பார்த்து அறிந்து அண்ணா கேண்டீன் என ஆந்திரத்திலும், இந்திரா உணவகம் என பெங்களூரிலும் தொடங்கி நடத்த தூண்டுகோலாக இருந்தது. எகிப்திலிருந்து பொருளாதார நிபுணர்கள் நேரில் வந்து இத்திட்டத்தினை பார்த்து வியந்தே போனார்கள்.
சுயநிதி குழுக்கள்
பெரும் நெருக்கடியிலும் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தார் ஜெயலலிதா. இந்த உணவகத்தை நடத்துபவர்களே மகளிர் சுய உதவிகுழுக்கள் தான் அந்த வகையில் பார்த்தால் மறைமுகமாக எத்தனையோ பேர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தது.அம்மா உணவகம் இன்றுவரை இயங்கி கொண்டிருப்பதும் இதே மகளிர் சுயஉதவிக்குழுக்களின் சிலருடைய முயற்சியினால்தான். அதுமட்டுமல்ல... ஜெயலலிதா மறைந்த அன்று தமிழகம் முழுவதும் கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்ட நிராதரவற்ற நிலையிலும் அம்மா உணவகம் இலவசமாக உணவளித்தது நெகிழ்வின் உச்சம்.
அம்மா உணவகம்
இன்று 6-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது அம்மா உணவகம். அம்மா உயிருடன் இருந்தவரை முக்கிய திட்டமாக கருதப்பட்ட அம்மா, உணவகம் இன்று கவனிப்பாரற்று கிடப்பதை பொதுமக்கள் நெஞ்சில் வலியுடனே பார்த்து செல்கின்றனர். மலிவு விலை உணவினை மூன்று வேளையும் வாரி வழங்கிட்டதுடன், லட்சக்கணக்கான பேரின் பசியை தீர்த்திட்ட இந்த அம்மா உணவகம் இன்று கேட்பாரற்று உள்ளது. பாத்திரங்கள் துருப்பிடித்தும், எந்திரங்கள் பழுதடைந்தும், அதிகாரிகளின் பொறுப்பின்மை, மாநகராட்சியின் அலட்சியங்கள் காரணமாக பொலிவிழந்து வருகிறது.
செய்யும் நன்றிக்கடன்...
துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அம்மாவின் ஆன்மா சும்மா விடாது என்று கூறிக்காண்டவர்கள், அம்மா உணவகம் திட்டத்தினை மீண்டும் எழுந்து நடமாட செய்தால், அதே ஆன்மா அவர்களை வாழ்த்தும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். அம்மாவின் மனசாட்சி என்பவர்கள், அம்மாவின் விழுதுகள் என கூறிக்கொள்பவர்கள். சவலைப் பிள்ளைபோல் தவித்துக்கொண்டிருக்கும் இந்த அம்மா உணவகத்தினை மீட்டு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் ஆட்சியாளர்கள் ஜெயலலிதாவுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.