காங்கிரஸும், திமுகவும் புருஷன் பொண்டாட்டி மாதிரி சண்டை போடுறாங்க: நடிகர் செந்தில்
சென்னை: மோடி அலையை அம்மா அலை தூக்கி விழுங்கிவிடும் என்று நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நகைச்சுவை நடிகர் செந்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
மின்வெட்டு
மழை பெய்யவில்லை என்று மக்களுக்கு தெரியும். அம்மா பதவியை விட்டு இறங்கியபோது அடுத்த மாநிலத்திற்கு மின்சாரம் கொடுக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. அதை கெடுத்து குட்டிச்சுவராக்கியதே கருணாநிதி தானே.
தம்பிதுரை
தம்பித்துரை உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதாக எனக்கு எதுவும் தெரியவில்லை. ஏன் நானும் தான் பிரச்சாரத்திற்கு செல்கிறேன். என் காரையும் இந்நேரம் மறித்திருப்பார்களே!
விஜயகாந்த்
கடந்த தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைத்து நாங்கள் கட்டிய புத்துக்குள் சொகுசாக வந்து படுத்துக் கொண்டார் விஜயகாந்த். ஊழல் பற்றி பேசுகிறாரே அவருக்கு மெடிக்கல் காலேஜ் கட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதை முதலில் சொல்லட்டும். அதன் பிறகு ஊழல் பற்றி பேசட்டும்.
மின்சாரம்
மின்சாரம் என்ன கடையிலா விற்பனை செய்யப்படுகிறது? அனைத்தையும் நாசமாக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். மெதுவாகத் தான் சரி செய்ய முடியும். அப்படி சரி செய்யும்போதே கருணாநிதியின் ஆட்கள் இடையில் சதி செய்கிறார்கள். போலீசாருக்கு அம்மா எவ்வளவோ செய்திருக்காங்க. ஆனால் அவர்களே எங்களை தற்போது கண்டுகொள்வது இல்லை என்று தெரியுமா?
கம்யூனிஸ்டுகள்
40 தொகுதிகளிலும் நின்று வெற்றி பெற்று கருணாநிதி மற்றும் காங்கிரஸுக்கு பாடம் புகட்ட நினைத்து அம்மா தனித்து போட்டியிடுகிறார்கள்.
மோடி அலை
எனக்கு தெரிந்தது அம்மா அலைதாங்க. மோடி அலையை எல்லாம் அம்மா அலை தூக்கி சாப்பிட்டுவிடும்.
காங்.-திமுக
திமுகவும், காங்கிரஸ் கட்சியும் புருஷன் பொண்டாட்டி போன்று சண்டை போட்டுக் கொள்கிறாங்க. தேவைப்பட்டால் நாளைக்கே கட்டிபிடிச்சுக்குவாங்க. அதனால் பாஜகவை விட்டுவிட்டு முதலில் இந்த இரண்டு கட்சிகளையும் தான் தாக்கிப் பேசுகிறோம்.
கருணாநிதி
கருணாநிதி நல்லது செய்திருந்தால் அவரை பாராட்டலாம். மஞ்சள் பையும் கையுமான சென்னை வந்த கருணாநிதி தற்போது உலக பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். அவரது பேரன் தயாநிதி மாறன் வேட்புமனுவில் தனக்கு வெறும் ரூ. 10 கோடி சொத்து தான் உள்ளது என்று கூறியிருக்கிறார். இதை நம்ம நம்பணும். இதை பற்றி எல்லாம் பேசக் கூடாதா என்றார் செந்தில்.