திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற 10 தமிழர்கள் கைது: செம்மரம் கடத்தியதாக புகார்
தூத்துக்குடி: திருச்செந்தூரில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி கும்பிடச் 10 பேரை செமமரம் கடத்தியதாக கூறி ஆந்திர காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள அம்பலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல், முருகன், வேல்முருகன், உள்ளிட்ட 10 பேர் கடந்த 13ம் தேதி திருப்பதி கோயிலுக்கு காரில் புறப்பட்டனர். தஞ்சை பெரிய கோவில், திருவரங்கம், சமயபுரம் மாரியம்மன், திருவண்ணாமலைக் கோயில்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு கடந்த 15ம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர்களது கார் வழி தவறி சென்றுள்ளது. இதையடுத்து செம்மரம் கடத்த வந்ததாக கூறி, ஆந்திரா வனத்துறையினர் 10 பேரையும் கைது செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 16 ம் தேதியன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது தான் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து 10 பேரையும் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications