ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: மதுரையில் 3 சாட்சிகளிடம் விசாரணை
மதுரை: செம்மரக்கட்டைகளைக் கடத்தியதாக ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட வழக்குத் தொடர்பாக, மதுரையில் 3 சாட்சிகளிடம் ஆந்திரா சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளைக் கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனை தொடர்ந்து மதுரை மக்கள் கண்காணிப்பக குழுவினர் ஆந்திராவிற்கு கொலை தொடர்பான கள ஆய்வுக்கு சென்றனர். அப்போது சம்பவத்தின் சாட்சிகளாக சேகர், இளங்கோ, பாலசந்திரன் ஆகியோரை மீட்டு மதுரைக்கு அழைத்து வந்தனர்.

இது தொடர்பாக அந்த மூன்று சாட்சிகளை விசாரிக்கக் கோரி 60 நாட்களுக்கு முன்பு ஆந்திரா சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தகவல் அனுப்பப் பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று டி.ஐ.ஜி., ரமணா குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் சாட்சிகளிடம் நேரடி விசாரணையைத் தொடங்கினர்.
இந்த விசாரணை தொடர்பாக ரமணாகுமார் கூறுகையில், ‘செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக சாட்சிகளிடம் விசாரிக்க வந்துள்ளோம். விசாரணை இன்றே முடிந்துவிடும் என்று சொல்ல முடியாது, அதன் தன்மையை பொறுத்து இன்னும் சில நாட்கள் தொடரலாம். இவ்வழக்கு நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளதால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து எங்களால் எதுவும் கூற இயலாது' என்றார்.
இந்த விசாரணையின் போது சிறப்பு புலனாய்வு குழுவினரோடு மதுரை ஆர்.டி.ஓ. செந்தில் குமாரியும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications