அனிதாவின் மரணம் மிகப்பெரிய இழப்பு... மாணவர்களே தைரியமாக இருங்கள்- செங்கோட்டையன்
மாணவி அனிதாவின் மரணத்தை பெரும் இழப்பாக கருதுகிறேன் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அனிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவி அனிதாவின் தற்கொலை மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. தற்கொலைக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள்தான் என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவி மரணம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அனிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறினார். மாணவர்களுக்கு ஒருமுறைக்கு 3 முறை வாய்ப்பு வழங்கப்படுகிறது. பொது தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
மாணவர்கள் மன தைரியத்தை இழந்து விட வேண்டாம். தைரியமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இதேபோல மாணவி அனிதாவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாகவும், மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதேபோல அனிதாவின் தற்கொலைக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பு மகள் அனிதாவின் தற்கொலை வருத்தம் தருகிறது என்றும், அனிதா இப்படி முடிவெடுப்பார் நினைத்து பார்க்கவில்லை என்றும் தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.