அடித்தட்டு மக்களின் அன்புக்குரிய அன்னா ராஜம் மறைந்தார்!

Subscribe to Oneindia Tamil

-ராஜாளி

சென்னை: அடித்தட்டு மக்களின் அதிகாரி என்ற பெருமையைப் பெற்ற அன்னா ராஜம் மல்ஹோத்ரா மறைந்தார். இவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

இந்தியாவின் முதல் பெண் ஐ பி எஸ் அதிகாரியான கிரண்பேடியை தெரிந்த நம்மில் பலருக்கும் இந்தியாவின் முதல் பெண் ஐ ஏ எஸ் அதிகாரி யார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அவர் தமிழ்நாடு பிரிவை சார்ந்த அதிகாரி என்பதுவும் நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். கேரளாவில் பிறந்த அன்னா ராஜம் மல்ஹோத்ரா என்பவர்தான் இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி. அவர் நேற்று மும்பையில் காலமானார்.

கேரளாவில் உள்ள நிராணம் என்ற ஊரில் பிறந்த இவர் கோழிக்கோட்டில் உள்ள புராவிடன்ஸ் மகளிர் கல்லூரி, மலபார் கிறிஸ்தவ கல்லூரி ஆகியவற்றில் இளங்கலை பட்ட படிப்பை முடித்தார். பின்னர் 1949- ல் சென்னை பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார். 1950 ல் ஆட்சிப்பணி பயிற்சியை நிறைவு செய்த அவர் தமிழ்நாடு பிரிவு அதிகாரியானார். இவருடைய தாத்தா மலையாள எழுத்தாளரான பைலோ பாலின். ஓ. ஏ. ஜார்ஜ் மற்றும் அன்னா பால் ஆகியோருக்கு மகளாகப் பிறந்த அன்னா ராஜம் ஜார்ஜ் ஆட்சிப் பணிக்கான பயிற்சியை முடித்த பின்னர் சென்னை மாகாணப் பிரிவு அதிகாரியாக வருகிறார். அவர் ஐ ஏ எஸ் அதிகாரியானதே பெரும் போராட்டத்திற்கு பின்னர்தான்.

1950-ல் சிவில் சர்வீஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்தவர் நேர்முகத்தேர்வு சுற்றுக்கு முன்னேறுகிறார். அப்போது நேர்முகத்தேர்வு குழுவில் இருந்தவர்கள் இவர் சிவில் சர்வீஸ் பணிக்கு பொருத்தமானவர் அல்ல என்றும் அயலகப் பணியோ அல்லது மத்தியப் பணியோதான் அவருக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று கூறி அவரை வேறு பணிக்கு மாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் அவர் தேர்வில் பெற்றிருந்த ரேங்க் அவரது தைரியத்துக்கு துணை சென்றது. விடாப்படியாக நின்று சிவில் சர்விஸ் பணியையே தேர்வு செய்கிறார். அதோடு சென்னை மாகாண அதிகாரியாகவும் வருகிறார். அவரது அப்பாயின்மென்ட் கடிதத்தில் உங்களுக்கு திருமணமாகிவிட்டால் இந்தப் பணிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எழுதப்பட்டிருந்தது, பின்னாளில் இரண்டு வருடங்கள் கழித்து அந்த விதிமுறை மாற்றப்பட்டது என்பது வேறு கதை.

ராஜாஜிக்குப் பிடிக்காத அன்னா

ராஜாஜிக்குப் பிடிக்காத அன்னா

அன்னா ராஜம் ஜார்ஜ் சென்னை மாகாணப் பிரிவு அதிகாரியாக வரும்போது ராஜாஜி சென்னை மாகாண முதல்வராக இருக்கிறார். ராஜாஜிக்கு பெண்கள் பொது இடங்களில் வேலைக்கு வருவது என்பதே பிடிக்காத விசயமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு கொள்கையை கொண்டவர் அவர். அப்போது ஐ எ எஸ் அதிகாரியாக பணிக்கு வந்த இவரை மாவட்ட ஆட்சிப் பணிக்கு அனுப்பினால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சரியாக கையாள மாட்டார், ஒரு மாவட்ட நிர்வாகத்தை நிர்வகிக்கும் அளவுக்கு நிர்வாகத் திறமை இருக்காது என்றெல்லாம் எண்ணினார் ராஜாஜி. அதனால் இவரை தலைமைச் செயலகத்திலேயே பணி புரிய அறிவுறுத்தினார். அன்னா ராஜம் ஜார்ஜ் அவரிடம் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என்று போராடி ஓசூர் மாவட்ட துணை ஆட்சியராக பொறுப்பேற்கிறார். பொறுப்பேற்ற பின்னரும் ஒரு பெண்ணால் எப்படி சட்டம் ஒழுங்குப் பிரச்சனையையோ அல்லது லத்தி சார்ஜ் பிரச்சனையையோ எவ்வாறு எதிர்கொள்ள முடியும் எப்படி ஒரு சீரான நிர்வாகத்தை தர முடியும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்ததை அன்னா உணர்ந்தே இருந்தார். ஆக இப்படிப்பட்ட பாலின பாகுபாட்டை களைய அவர் வெகுகாலம் போராட வேண்டியிருந்தது.

பாராட்டு பெற்றார்

பாராட்டு பெற்றார்

இந்தப் போராட்டத்தின் விளைவாக முதல்வர் ராஜாஜி திருச்சியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் இவரை வெகுவாக பாராட்டுகிறார். பெண்களுக்கு ஒரு உதாரணம் என்று புகழ்ந்து பேசுகிறார். அதோடு முதல்வரின் அதிகாரப்பூர்வ அறிக்கையிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் அன்னா என்றும் ராஜாஜி குறிப்பிடுகிறார். ஒருமுறை ஓசூரில் 6 காட்டு யானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. அவற்றை சுட்டுக் கொல்லவேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. ஆனால் அன்னா மறுத்துவிடுகிறார் அதோடு அவற்றை பத்திரமாக மீட்டு காட்டுக்குள் திருப்பி அனுப்பி வெற்றி காண்கிறார்.

இந்திராவுடன் நட்பு

இந்திராவுடன் நட்பு

1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜீவ் காந்தியோடு இணைந்து பணியாற்றி திறம்பட செயல்படுத்தினார். பின்னர் 7 முதல்வர்களோடு பணியாற்றி பெருமை கொண்ட அன்னா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடனும் நெருக்கமான நட்பை கொண்டிருந்தார். அன்னாவின் கணுக்காலில் முறிவு இருந்தபின்னரும் அவர் இந்திராவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தன்னுடன் பணியாற்றிய மல்ஹோத்ராவை திருமணம் செய்து கொண்டார் அன்னா. மல்ஹோத்ரா, இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நிதிச் செயலராக பணியாற்றியவர் பின்னாளில் இவர்களது திருமணத்தின்போது சர்வதேச நாணய நிதியத்தில் இந்திய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதோடு 1985 -ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றினார் மல்ஹோத்ரா.

கணவர் மல்ஹோத்ரா

கணவர் மல்ஹோத்ரா

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்க மல்ஹோத்ரா இந்தியா வந்தபோது அன்னா இந்தியாவின் முதல் கணினி மயமாக்கப்பட்ட துறைமுகத்தை கட்டியெழுப்பும் பொறுப்பில் இருந்தார். இதுவரை அப்படிப்பட்ட பணி அனுபவமில்லாத அன்னா அத்திட்டத்தை வெகு சிறப்பாக செய்து முடித்தார். அதிகாலையிலேயே தெற்கு மும்பை பகுதிக்கு பணிக்கு கிளம்பும் அவரது செயல்பாடுகளை அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி வெகுவாக பாராட்டினார். 1989ன் பிற்பகுதியில் இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டது. பின்னர் அன்னாவின் சிறந்த பணிகளை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.

முன்னுதாரணப் பெண்

முன்னுதாரணப் பெண்

ஆரம்பித்திலிருந்தே பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து பாலினப் பேதத்திற்கு எதிராக போராடி பெண்களுக்கு உதாரணமாக திகழ்ந்து தனது பனிக்காலத்தில் கிராமப்புற மக்களுக்காக பணியாற்றிய அந்த அதிகாரி நேற்று நம்மை விட்டு மறைந்து விட்டார். அவர் மறைந்தாலும் இந்தியாவின் முதல் பெண் ஐ ஏ எஸ் அதிகாரியாக அவர் விட்டு சென்ற தடங்கள் நம்மை விட்டு மறையப் போவதில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+