ராமதாஸ் மனைவி காலில் விழுந்த அண்ணாமலை.. மலைத்த அன்புமணி! தைலாபுரம் தோட்டத்தில் ஒரு நெகிழ்ச்சி
திண்டிவனம்: பாஜக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக தைலாபுரம் தோட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது மொத்த இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக லோக் சபா தேர்தல் நடக்கும் நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் நடைபெறுகிறது.

இதுவே பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. காரணம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்திற்கு பிரதமர் மோடி 4 முறை வந்து சென்றுவிட்டார். அங்கு அவர் தலைமையில் பொதுக் கூட்டங்கள் நடந்தன. எனவே தமிழகத்திற்கு முதல் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டுதான் தமிழகத்தில் பிரதமர், தேர்தல் பிரச்சாரம் செய்தாரா என்ற கேள்வி எழுந்தது.
பிரதமர் நரேந்திர மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் கூட்டணி எதுவும் இறுதியாகவில்லை என்பதால் பாஜக தலைவர்களுக்குள் சற்று நெருடல் இருந்து வந்தது. இதனிடையே அதிமுக, பாஜகவுடன் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு பாஜகவுடன் கூட்டணி என பாமக அறிவித்தது.

இதையடுத்து இன்று காலை திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அவர்களை ராமதாஸின் மனைவி சரஸ்வதி, அவர்களை வரவேற்றார். உள்ளே சென்ற அண்ணாமலை திடீரென, சரஸ்வதியின் காலில் விழுந்து ஆசிபெற்றார்.
இதையடுத்து அண்ணாமலையும் அவ்வாறே செய்தார். இதை பார்த்த அன்புமணி நெகிழ்ந்தார். பின்னர் பாஜக தலைவர்களும் பாமக தலைவர்களும் தனி அறையில் நீண்ட நேரமாக ஆலோசனை நடத்தினர். இதையடுத்துதான் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தெரியவந்தது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் மாநிலங்களவை சீட் குறித்து எந்த தகவலும் இல்லை. அதிமுகவுடன் இத்தனை நாளாக மாநிலங்களவைக்குத்தான் பாமக மல்லுக்கட்டி வந்தது. ஆனால் பாஜகவில் எந்த தகவலும் இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில் பாஜக தேசிய கட்சி, கூட்டணி கட்சிக்கு ராஜ்யசபா எம்பி தருகிறார்கள் என தெரிந்தால் இதே அணுகுமுறையை மற்ற கூட்டணி கட்சியினரும் கேட்பர்.
இதனால் நெருக்கடிகள் எழக் கூடும். எனவே அதை ஆவணங்களாக பதிவு செய்ய பாஜக விரும்பவில்லை. மேலும் இந்த ஒப்பந்த கையெழுத்தின் போது பாஜகவை சேர்ந்த மாநில அளவிலான தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய அளவிலான தலைவர்களும் இடம்பெற்றிருந்தனர். எனவே பாமகவுக்கு ஏதாவது வாய்மொழி உத்தரவாதம் கிடைத்திருக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications