இனியும் இப்படி நடந்தால் சும்மா விட மாட்டோம்.. பாஜக நிர்வாகி கொலை..திமுக அரசுக்கு அண்ணாமலை வார்னிங்!
சென்னை : பாஜக மாநில நிர்வாகி நாட்டு வெடிகுண்டு வீசி, விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் தமிழக பாஜக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி சங்கர் (42). இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் சென்னைக்கு சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு தனது காரில் டிரைவருடன் சென்று கொண்டிருந்தார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரை ஒரு மர்ம கும்பல் வழிமறித்தது.

அந்த கும்பல் காரின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டு வீசியதையடுத்து, காரின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. அவர்கள் தன்னை கொலை செய்ய வந்துள்ளார்கள் என்பதை அறிந்து காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடியுள்ளார் பிபிஜி சங்கர். அங்கும் மறைந்திருந்த மர்ம கும்பல் விடாமல் விரட்டிச் சென்று பிபிஜி சங்கரை சரமாரியாக வெட்டினர்.
அண்ணாமலை கண்டனம் : இதில் பிபிஜி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு, கொலைக்கான காரணம் என்ன? தொழில் போட்டியா அல்லது அரசியல் பழிவாங்கலா என பல்வேறு கோணங்களில் விசாரித்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகி கொலை சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

திமுக அரசுக்கு எச்சரிக்கை : மேலும், "கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் தமிழ்நாடு பாஜக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications