அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த மழை பெய்யுமாம்!
சென்னை: சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக விடிய விடிய இடியோடு கூடிய மழை கொட்டியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
நேற்று மதியம் முதல் வருணபகவான் ரெஸ்ட் எடுத்த நிலையில் வெயில் லேசாக எட்டிப்பார்த்தது. பின்னர் மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம் மூலம் சென்னையில் மழை பெய்து வருகிறது.

கடலோர ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்து விட்டது. ஆனாலும் வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால் இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அநேக இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, சோழவரத்தில் 7 செ.மீ மழையும், பூண்டி, பொன்னேரியில் 6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications