ஒருதலைக் காதலால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் நவீனா மரணம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஒருதலைக் காதலால் செந்தில் என்ற இளைஞரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு ரோடு, வ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கப்பன், கூலி தொழிலாளி. இவரது மகள் நவீனா (18). விழுப்புரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில் (28) தனியார் பஸ் டிரைவர். இவர் நவீனாவை ஒருதலையாக காதலித்துள்ளார். கடந்த ஆண்டு மாம்பழப்பட்டு ரயில்வே கேட் அருகே வலது கை வலது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த செந்தில் ஒரு மாத சிகிச்சைக்குப் பின் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் ஜூலை 3ம் தேதி புகார் கொடுத்தார்.

அதில் நவீனாவின் பெற்றோர் துாண்டுதலின்பேரில் தன்னை கை, கால்களை வெட்டி ரயில் பாதையில் வீசி விட்டுச் சென்றதாக தெரிவித்திருந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நவீனா பெற்றோர் மீது செந்தில் பொய் புகார் கொடுத்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து நவீனா கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்திலை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வந்த செந்தில், நவீனா வீட்டிற்கு சென்று அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், பிளஸ் 2 முடித்த நவீனா மேற்படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் நவீனா தனது 14 வயது தங்கை மற்றும் 11 வயது தம்பியுடன் வீட்டில் இருந்தார்.
அப்போது நவீனாவின் வீட்டிற்கு பெட்ரோல் கேனுடன் சென்ற செந்தில், அவரது தங்கை, தம்பியை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினார். பின், பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டு நவீனாவை கட்டிப் பிடித்துக் கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் மரணமடைந்தார். படுகாயமடைந்த நவீனா மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீனா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் நவீனா உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது விழுப்புரத்தில் ஒருதலைக்காதலுக்கு இளம்பெண் நவீனா பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications