‘அம்மாவின் ஆசிர்வாதத்திற்கு இணங்க’.. சேலத்தைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய புதுக்கோட்டை கலெக்டர்
புதுக்கோட்டை: கல்லூரி விழா ஒன்றில், ‘அம்மாவின் ஆசிர்வாதத்திற்கு இணங்க' எனப் பேச்சைத் தொடங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் கணேஷ்.
கடந்தாண்டு கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி பெரும் பாதிப்பை சந்தித்தது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியாளர் 'அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பெய்துள்ளது' எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. அப்படியென்றால் அம்மாவின் ஆணை நகலைக் காட்டுங்கள் என தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியருக்கு மனுக்கள் குவிந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், அதிமுக தொண்டர் போலவே பேசி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 6500 மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்காண வினாவிடை கையேடு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் தலைவர் கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாந்தி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் கணேஷ், ‘மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் ஆசிர்வாதத்திற்கு இணங்க' எனப் பேச்சைத் தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.