காலங்காத்தாலேயே! அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் நுழைந்த விஜிலென்ஸ்! ரெய்டு!
பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
சத்யா பன்னீர்செல்வம் 2016 சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவரது வீட்டில் சோதனை நடப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் அவரது வீட்டருகே குவிந்து வருகின்றனர்.

சமீபகாலமாக, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டிலும் சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த அதிமுக ஆட்சியில், சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தபோது, பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிட டெண்டரில் ₹20 லட்சம் பண மோசடி செய்ததாகக் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பன்னீர்செல்வம் முதல் குற்றவாளியாகவும், அப்போதைய நகராட்சி ஆணையர் பெருமாள் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு மொத்தம் ஆறு பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக, முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த முறை 9 மணி நேரம் சோதனை நடத்தியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications