காவிரி வராவிட்டாலும் தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா - ஸ்ரீசைலம் அணையில் இருந்து சென்னைக்கு நீர் திறப்ப
சென்னை: ஆந்திரா மாநிலத்தில் கனமழை கொட்டி வருவதால் ஸ்ரீசைலம் அணை தனது முழு கொள்ளளவை எட்டி வருவதால் அதிலிருந்து சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக 5 டி.எம்.சி. தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு கங்கை திட்டத்தின் படி ஆண்டு தோறும் தமிழகத்துக்கு ஆந்திர அரசு 15 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். கிருஷ்ணா கால்வாயில் வரும் வழியில் 3 டி.எம்.சி. தண்ணீர் சேதாரம் போக மீதி 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகம் வந்து சேரும்.
ஆந்திராவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் உள்ள அணை, ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணை தனது கொள்ளவை எட்டியது. அந்த அணையின் நீர் மட்டம் 885 அடி ஆகும். தற்போது 881.70 அடி நீர் மட்டம் இருக்கிறது.
ஸ்ரீசைலம் அணை நிரம்பி வருவதால் அதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் கிருஷ்ணா கால்வாய் மூலம் கண்டலேறு நீர்தேக்கத்துக்கு செல்லும். ஆந்திரா அமைச்சர் உமா மகேஸ்வரராவ் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
ஸ்ரீசைலம் அணை தனது முழு கொள்ளளவை எட்டி வருவதால் அதிலிருந்து தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் திறக்கப்பட்டு உள்ளது. சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக 5 டி.எம்.சி. தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் திறந்து விடப்பட்டு இருக்கிறது. கண்டலேறு நீர்தேக்கத்தை அடைந்து அங்கிருந்து சென்னை ஏரிகளுக்கு அனுப்பப்படும் என்று ஆந்திரா அமைச்சர் உமா மகேஸ்வரராவ் கூறியுள்ளார்.
கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட பின்னர், திருப்பதி, காளஹஸ்தி வழியாக கிருஷ்ணா கால்வாயில் 152 கி.மீ. தூரத்தை கடந்து தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை அடையும். பின்னர் அங்கிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்தடையும். பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும்.
டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி நீரை விட கர்நாடகா அடம் பிடித்து வரும் நிலையில் ஆந்திரா மாநிலத்தில் அணைகள் நிரம்பி வழிவதால், சென்னையின் குடிநீர் தேவைக்காக தற்போது ஸ்ரீசைலம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.